Friday, July 27, 2012

புத்தர் பயமுறுத்துகிறார்

மாமிசம் உண்ட புத்தர் .......

வசனம் கண்டு கோபம் கொள்ள வேண்டாம். இந்த வசனத்தை கேட்டவுடன்   எனக்கும் வெகுண்டு எழத்தான் தோன்றியது. ஆனால் செய்தி கேட்டவுடன் உண்மையா என் மன மயக்கம் தோன்றவும் கூடும்.

இலங்கை இந்தியாவைப் போன்று ஒரு மதச் சார்பற்ற நாடு அன்று. இலங்கை அரசியல் சாசனப் படி இது ஒரு பௌத்த நாடு. பெருமைப் பட வேண்டியதுதான். ஆனால் அது ஒரு கேலிக் கூத்தாக மாறும் வரை. இலங்கையில் துரதிருஷ்ட வசமாக நடைபெறுவது என்னவோ அதுதான்.

இந்தியாவின் தேசியக் கொடியில் இருப்பது கூட அசோகச் சக்கரம் தானே?

சமத்துவம், சகோதரத்துவம் இவற்றை எய்துவதற்கு ஒரே வழி புத்த மதம்தான் என்பது அண்ணல் அம்பேத்கரின் முடிவு . ஆனால் அண்ணல் இலங்கையில் பிறந்திருந்தால் அந்த எண்ணத்தை மாற்றி இருப்பார் என்பது திண்ணம். ஏனென்றால் இந்தியாவின் சாபக் கேடான சாதி வெறியும் சரி, இலங்கையின் சாபக் கேடான இனவெறியும் சரி, சமூகத்தின் வக்கிரமே அன்றி சமயக் கோட்பாடுகளின் பிழை அன்று. 


ஏனென்றால் நாம் எமது மிருகத் தனத்துக்கு எல்லாம் மதச் சாயம் பூசிக் கொள்கிறோம் . 

புத்தர் மூன்று முறை இலங்கை வந்தார் என்று சிங்கள நூலான மகா வம்சம் கூறுகிறது. புத்த பெருமான் நாகரிகம் அற்ற இயக்கர் , நாகர் வம்சத்தை ( நம்ம தமிழப் பயதான்....) அழித்து  ஆரியர்கள் ( சிங்கள பௌத்தர்கள் ) சமயத்தை வளர்க்க வேண்டுமாம். 
( தமிழர்களை வந்தேறு குடிகள் என்று கூறுவதற்கு முரணாக அமையும் என்பதால் இயக்கரை , நாகரை தமிழர் என்று ஏற்றுக் கொள்வதில்லை சிங்களவர் )


அப்படியே இருந்தாலும் புறாவை  கொல்வதை  கூட ஏற்காத சித்தார்த்தன் ஒரு சமூகத்தை அளிக்க சொல்லி இருப்பானா ?


எல்லாளன் நேர்மையானவன் என்பதை மறுக்க முடியவில்லை. ஆனால் வஞ்சகமாக அவனைக் கொன்ற துட்டகெமுனு தமிழரை அழிப்பதன்  மூலம் புத்தரை நிலை நாட்டுகிறான் .


தமிழர் பகுதிகளில் புத்த தூபிகள் இருப்பது அது சிங்களவர்கள் உடையது என்பதற்கு சான்றாம். தமிழர்கள் ஒரு கட்டத்தில் பௌத்தர்களாக வாழ்ந்தனர் என்றும் அது அவர்களின் உடைமைகள் என்பது ஒரு போதும் அவர்கட்கு தெரியாது. இது அறியாமை அன்று. திட்டமிட்டு மறைக்கப் பட்ட உண்மைகள். 


எங்கள் ஐம்பெரும் காப்பியங்களும் சமண , பௌத்த காப்பியங்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. 


புத்தர் மூலம் அறிமுகம் ஆனது பஞ்ச சீலக் கொள்கை. புலால் உண்ணாமை, ஜீவா காருண்யம் இரண்டுமே சமணமும் பௌத்தமும் தந்த கொடைகள்  தானே? 


இலங்கையில் சைவர்கள் சிலர் மாமிசம் உண்பதில்லை. 
என் சக மாணவன் ஒருவன் அதற்கு காரணம் கேட்டான். அது உங்களுக்கு ( தமிழர்க்கு) மறுக்கப் படடதா?  என்று கேட்டான்.
நான் என் மேதாவி தனத்தை காட்ட  நினைத்து புத்த போதனைகளை அடுத்து தான் அப்படி ஒரு வழக்கம் அல்லது மறுமலர்ச்சி திருத்தம்  வந்ததாக கூறினேன்.


அவன் சாவகாசமாக கூறினான். 
" புத்தர் ஒரு போதும் அதனை மறுக்கவில்லை . புத்தர் கூட அதனை அடிக்கடி புசித்திருக்கிறார் . என்று எங்கள் சமய நூல்கள் சொல்கின்றன."
உண்மைதான் அப்படி ஒரு கற்பிதம் தான் இங்கு இருக்கிறது. அதாவது பௌத்தம் சிங்களவர்களை தூண்டி விடும் கருவியாக ,  துவேசத்தை கட்டியெழுப்ப , பிக்குகளின் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள தான் இங்கு பயன்படுகிறது. 


அங்கு பார்ப்பனர்கள்.... இங்கு பிக்குகள் ....
மதம் வேறு அன்றி   கொள்கைகள் அடக்கு முறைகள் வேறு அல்ல. சிங்களவர்களிடையே சாதி முறை தாராளமாக உண்டு. 


முன்னொரு காலத்தில் இலங்கை தமிழர்களிடையே புத்தர் அமைதியின் சின்னமாக அமர்ந்திருப்பார். இப்போதெல்லாம் புத்தர் சிலைகளின் அமைதி தமிழரின் மீதான அடக்கு முறை குறிக்கும் சின்னமாகவே அமைகிறது.


புத்தர் பயமுறுத்துகிறார். 


பி.கு.:
புத்தர் ஒரு புலால் உண்ணிதான் என்ற கற்பிதம் உண்மைலேயே உண்டு. நான் வெப் தேடலிலும் வாசித்தேன். சர்ச்சை என்னவெனில் இங்கு இந்த புத்தம் அரசியல் மட்டுமே என்பதுதான் 


" Buddhism is not practiced as a religion here, It is rather used as an equipment here. "


அது சரி எந்த நாட்டிலுமே மதம் ( எந்த மதமானாலும் ) இப்படிதானே பயன் படுகிறது .... 
 மனிதன் ஒரு கொடூரமான சமூகப் பிராணி.. 



19 comments:

  1. அருமையான பதிவு. # முன்னொரு காலத்தில் இலங்கை தமிழர்களிடையே புத்தர் அமைதியின் சின்னமாக அமர்ந்திருப்பார். இப்போதெல்லாம் புத்தர் சிலைகளின் அமைதி தமிழரின் மீதான அடக்கு முறை குறிக்கும் சின்னமாகவே அமைகிறது.


    புத்தர் பயமுறுத்துகிறார். #
    உண்மைதான் தோழா. நம்ம வலைப் பதிவுப் பக்கமும் கொஞ்சம் வாறது????????
    அடுத்தது கருத்துரை இடும் முறையினை உட்பொதிக்கப்பட்ட முறையில் வைக்கவும். போப் - அப் விண்டோ முறை எரிச்சலை அளிக்கிறது.

    ReplyDelete
  2. நல்லதொரு பதிவு ...

    முதலில் புத்தர் மாமிசம் சாப்பிட்டாரா --- ஆம் ! சாப்பிட்டார் அப்படித் தான் பௌத்த நூல்கள் கூறுகின்றன.

    ஒரு பிக்கு மாமிசம் சாபிடலாமா --- பிச்சைப் பாத்திரத்தில் மாமிசம் போடபட்டால் விரும்பினால் அவற்றை சாப்பிடலாம்.

    உயிர்களை கொல்லலாமா --- பிக்குவானவன் உயிர்களைக் கொல்லக் கூடாது. பௌத்தர்களும் உயிர்களைக் கொல்லக் கூடாது. ஆனால் அவை பௌத்த மதத்தில் கட்டாயமாக்கப்படவில்லை என்றே நினைக்கின்றேன். பிக்குக்களுக்கு மட்டுமே அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிங்கள் பிக்குகள் இதனை மதிப்பது இல்லை.

    சைவர்கள் பலர் மாமிசம் சாப்பிடதாது ஏன் --- பௌத்தம் போல் இல்லாமல் சமணம் உயிரைக் கொல்லவும், அதனைப் புசிப்பதையும் கடுமையாகத் தடுக்கின்றது. பால் தவிர வேறு எதனையும் உயிர்களிடத்தில் இருந்து பெற்று உண்ணக் கூடாது என்பதே. ஒருக் காலத்தில் இன்றைய சைவர்கள் பலர் சமணர்களாகவே இருந்தனர். குறிப்பாக தமிழ்நாடு, கருநாடகத்தில் ... !!! சோழர்களின் ஆட்சியில் அதாவது பத்தாம் நூற்றாண்ட்டுக்கு பிறகே சமணர்கள் சைவர்கள் ஆனார்கள். ஆனால் பலரால் சமண பழக்க வழக்கங்களை விட முடியவில்லை. இன்றைய தமிழ் கிருத்தவர்கள் பொட்டு வைத்துக் கொள்வது போல !!! சமணத்தில் ஆச்சாரமாக இருப்பவர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக கருதப்பட்டது. அதாவது இன்றைய நவநாகரிக காலத்தில் டிப்டாப்பாக வாழ்பவர்கள் போல கருதப்பட்டது. அதனாலேயே பிற்காலத்தில் சமணம் சாராதோர் பலர் தாழ்ந்த சாதிகளாக மாற்றப்பட்டனர். குறிப்பாக தாழ்ந்த சாதியினர் பலரும் பௌத்தர்களாக இருந்தவர்கள். பல வைணவர்களும் பௌத்தர்களாக இருந்தவர்கள்... !!!

    அதனால் தான் அம்பேத்கார் பௌத்தத்தை தேர்ந்தெடுத்தார். இலங்கையில் என்ன மாதிரி பௌத்தம் இருந்தது என்பது அவருக்கு நன்கு தெரியும் அதனால் தான் புதிய பௌத்தம் என அவர் உருவாக்கினார். இலங்கையில் கூட சில பௌத்த பிரிவுகள் தமிழர்களுக்கு விரோதமானவை அல்ல .. !! சில பிரிவுகள் அரசியல் செல்வாக்குடன் இருப்பதால் அவை தீவிரவாதிகளாக செயல்படுகின்றனர்.

    ReplyDelete
  3. புத்தர் மூன்று முறை இலங்கை வந்தார் என்று சிங்கள நூலான மகா வம்சம் கூறுகிறது. --- மகா வம்சம் மட்டுமல்ல மணிமேகலையும் கூறுகின்றது. பூம்புகாரில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாலி மொழியிலான பௌத்த நூல்களும் கூறுகின்றன. ஆனால் அவை உண்மையல்ல.. ஏனெனில் புத்தருக்கு பின் சுமார் 600 -900 ஆண்டுகளில் தான் இவை எழுதப்பட்டன. ஆகையால் தென்னிந்தியாவில் பௌத்தம் பரப்ப சில விசமிகள் பரப்பிய செய்தி அது .. இயேசுவின் சீடர் கூட சென்னை வந்தார் என கிருத்தவர்கள் கூறுகின்றனர். அது எந்தளவுக்கு உண்மை என்பதி நம்மால் உணரமுடியும்.

    புத்த பெருமான் நாகரிகம் அற்ற இயக்கர் , நாகர் வம்சத்தை ( நம்ம தமிழப் பயதான்....) அழித்து ஆரியர்கள் ( சிங்கள பௌத்தர்கள் ) சமயத்தை வளர்க்க வேண்டுமாம். --- புத்தர் இயக்க, நாகரை அழிக்க சொல்லி இருக்க மாட்டார். ஏனெனில் அவருக்கு இலங்கைத் தீவு பற்றி தெரிந்திருந்ததா என்பதே சந்தேகம். தண்டகாரணியத்துக்கு தெற்கே அவர் வரவே இல்லை.

    அடுத்து இயக்கர், நாகர் மட்டுமல்ல பல்வேறு பழங்குடிகள் இலங்கையில் இருந்தன. அவர்கள் தமிழர்கள் என்று கூறுவதும் சரியன்று ... ஆனால் அவர்களின் ஜீன்கள் இன்று இலங்கையில் உள்ள அனைத்து இனத்திலும் இருக்கக் கூடும் ..

    இயக்கர் நாகர் என்பவர்கள் அந்தமானின் ஜரவாக்காள், ஆஸ்திரேலியாவின் அபராஜின்கள் போல கற்கால மனிதர்களாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

    தமிழர்கள் என்ற இனம் பிற்காலங்களில் அங்கு குடியேறி அவர்களோடு கலந்திருக்க வேண்டும் !!! அந்தக் கலப்பில் உருவானதே சிங்களத் தீவு.. ஆம் சிங்களவர்களும் தமிழர்களின் வழித்தோன்றல்களே. தாம் ஆரியர் எனக் கூறிவருவது எல்லாம் வரலாற்றுத் திரிபுகள் .. !!!

    இந்தியாவில் இருந்து கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக படிபடியாக குடியேற்றங்கள் இலங்கையில் நிகழ்ந்துக் கொண்டே தான் இருக்கு. அவை முறையே சிங்கள - தமிழ் கலாச்சாரங்களோடு கலந்துவிடுகின்றன.. அவ்வளவே.. சிங்களவர்களில் கூட கரவா, சாலகம, என பல சாதிகள் தமது பூர்விகத்தை தமிழ்நாடு - கேரள என கூறிய போதும் .. புத்தப் பிக்குகள் அனைவரும் விஜயனின் வழித்தோன்றல்கள் எனக் கூறி மறைக்கின்றனர்.

    விஜயன் கூட வங்காளத்தில் இருந்து வந்தானா என்பதே ஐயம் தான். கேரள ஈழவர்களின் குல வரலாற்றுப் படி. நரசிம்ம விஜயன் என்னும் மன்னன் கேரளாவில் இருந்து இலங்கை சென்று தனது மனைவியோடு ஆட்சி செய்ததாகவும். பின்னர் மகன்களோடு ஏற்பட்ட பிணக்கால் கேரள வந்துவிட்டதாகவும் கூறுகின்றது ..

    ReplyDelete
  4. எல்லாளன் நேர்மையானவன் என்பதை மறுக்க முடியவில்லை. ஆனால் வஞ்சகமாக அவனைக் கொன்ற துட்டகெமுனு தமிழரை அழிப்பதன் மூலம் புத்தரை நிலை நாட்டுகிறான் --- இதுவும் தவறான தகவல். எல்லாளன் காலம் முன்னரே பௌத்தம் இலங்கையில் இருந்தது. எல்லாளன் கூட இந்து கிடையாது. அப்போது சைவமோ இந்துவோ தென்னிந்தியாவில் இருந்திருக்கவில்லை. தமிழரின் நாட்டார் வழிபாடுகளும் - பௌத்த சமணமும் தான் இருந்தன. துட்ட கெமுனு - எல்லாளன் யுத்தமானது வெறும் அரசியல் சார்ந்ததே இதில் இன சாயம் - மத சாயம் பிற்காலத்தில் பூசியவை தான். பல சிங்கள மன்னர்களே பிரச்சனை ஏற்படும் போது எல்லாம் பாண்டியர்களிடம் ஓடிவருவதும் பின்னர் பாண்டியரோடு துணையோடு முடியினை மீட்பதும் வரலாற்றில் பதிந்துள்ளன.. சிங்கள இனமே தென் தமிழகத்தின் வழித்தோன்றல்கள் தான் ... !!!

    தமிழர் பகுதிகளில் புத்த தூபிகள் இருப்பது அது சிங்களவர்கள் உடையது என்பதற்கு சான்றாம். தமிழர்கள் ஒரு கட்டத்தில் பௌத்தர்களாக வாழ்ந்தனர் என்றும் அது அவர்களின் உடைமைகள் என்பது ஒரு போதும் அவர்கட்கு தெரியாது. இது அறியாமை அன்று. திட்டமிட்டு மறைக்கப் பட்ட உண்மைகள். -----

    ஆம் சரியே ! தமிழர்கள் பௌத்தர்களாகவே இருந்துள்ளனர். அவர்கள் கட்டிய தூபிகள் இலங்கை மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் கூட கிராமம் தோறும் இன்றளவும் இருக்கின்றன. என்ன குலதெய்வங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

    ஆனால் இன்று இலங்கையில் உள்ள உயர்குடி சைவர்கள் நேரிடையான பௌத்தர்களில் இருந்து சைவர்களாகி இருக்க வாய்பில்லை, மாறாக சோழர்களோடு இலங்கையில் புகுந்த சோழ சைவர்கள், வீர கேரள சைவர்களின் வாரிசுகளாகவே இருக்க வேண்டும். தமிழ் பௌத்தர்கள் அங்கு தாழ்ந்த சாதியாகவும், சிங்களவர்களோடும் கலந்திருக்க வேண்டும் ... !!!

    அங்கு பார்ப்பனர்கள்.... இங்கு பிக்குகள் ... கூடவே பாதிரியார்களையும், இமாம்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் .. அனைத்து மதகுருமார்களும் சுயநலமானவர்களே என்பது தான் வரலாறு சொல்லும் உண்மைகள் ..

    புத்தர் பயமுறுத்துகிறார். புத்தர் யாரையும் பயமுறுத்தியது இல்லை... புத்தரின் பேரால் பிக்குகளே பயமுறுத்துகின்றனர். புத்தர் சிலை வைக்கும் பழக்கம் கூட புத்தர் இறந்து 600 ஆண்டுகள் கழித்தே தோன்றின. சிலை வைக்கும்படி புத்த திரிரதங்களில் எங்கும் கூறியது இல்லை ..

    பாருங்கள் மதவாதிகள் எப்போதுமே அடிப்படைத் தத்துவங்களை எல்லாம் விட்டுவிட்டு தாமாகவே எதாவது யோசித்து செய்வார்கள். அதனை நம்ப லட்சக் கணக்கானோர் இருக்கும் வரை பிக்குகள் முதல் நித்திகள் வரை வாழ்வு தான் போங்க !!!

    ReplyDelete
  5. பெரியயயய .. பின்னூட்டத்துக்கு மன்னிக்க !!

    ReplyDelete
    Replies
    1. இக்பால் செல்வன்,
      உங்கள் புரிதல் வியப்பாக உள்ளது. ஏன் உள்ளடக்கம் உணவுப் பழக்கத்தை பற்றியதல்ல உணர்வுகளைப் பற்றியது என்பதை புரிந்து கொண்ட உங்களுக்கு முதலில் நன்றி.
      உங்கள் பதிவுகளை வாசித்திருக்கிறேன். அதே அளவு ஆழம் உங்கள் பின்னூடதிலும் காண்கிறேன்.

      Delete
    2. அற்புதம் இக்பால் செல்வம் - வரலாறு புத்தகம் படிப்பதைப்போல் உள்ளது

      Delete
  6. முதலில்
    //பெரியயயய .. பின்னூட்டத்துக்கு மன்னிக்க !!////
    வாய்ப்பே இல்லை. உங்கள் பின்னூடத்துக்கு நன்றிதான் கூற முடியும். முதல் பின்னூட்டத்திலேயே ஆழமான கருத்துகளை அளித்து விட்டு சென்றீர்கள்.

    ReplyDelete
  7. பிக்குவானவன் உயிர்களைக் கொல்லக் கூடாது. பௌத்தர்களும் உயிர்களைக் கொல்லக் கூடாது. ஆனால் அவை பௌத்த மதத்தில் கட்டாயமாக்கப்படவில்லை என்றே நினைக்கின்றேன். ///
    இல்லை ... பௌத்தர்களுக்கும் இது கட்டாயமாக்கப் பட்டுள்ளது என்றே நினைக்கிறேன்.

    தமிழர்கள் பௌத்தர்களாகவே இருந்துள்ளனர். அவர்கள் கட்டிய தூபிகள் இலங்கை மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் கூட கிராமம் தோறும் இன்றளவும் இருக்கின்றன//
    சரியாகச் சொன்னீர்கள்.இன்றைய தமிழர்களின் வழிபாடுமுறை பௌத்தர்களாகவே என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. எல்லாளன் காலம் முன்னரே பௌத்தம் இலங்கையில் இருந்தது.//
    இதை நான் மறுக்கவே இல்லை சகோ... நான் கூறியது துட்டகெமுனு மீள பௌத்தத்தை நிலை நாடினான் என்பதே... அவன் பெயரால் மிகப் பெரிய அளவில் மத, இனவெறி தூண்டப் படுகிறது என்பது உங்களுக்கே தெரியும்.

    அடுத்து இயக்கர், நாகர் மட்டுமல்ல பல்வேறு பழங்குடிகள் இலங்கையில் இருந்தன. அவர்கள் தமிழர்கள் என்று கூறுவதும் சரியன்று////
    ஆம் சகோ. நானும் பதிவின் போது யோசித்தேன். இது ஆராய்ச்சிக்குரியது.
    ஆனால்.. புத்தர் கொடூரமான இயக்கர் , நாகரை அழித்து சிங்களவர்களிடம் கொடுக்கிறார். ஆனால் சிங்களவர்கள் அதனை உருவகப் படுத்துவது தமிழர்களை தான்

    ReplyDelete
  9. . குறிப்பாக தாழ்ந்த சாதியினர் பலரும் பௌத்தர்களாக இருந்தவர்கள். பல வைணவர்களும் பௌத்தர்களாக இருந்தவர்கள்..///
    ஆம் சகோ.. பௌத்த மடங்கள் பள்ளிகள் எனப் பட்டன. இந்த சொல்லே "பள்ளர்கள் " என்ற சொல்லுக்கு அடிச்சொல் என்பது சிலரின் வாதம்.

    சைவர்கள் பலர் சமணர்களாகவே இருந்தனர்//
    அருமை சகோ. .இது வெளிப்படை உண்மை.

    ReplyDelete
  10. சிங்களவர்களும் தமிழர்களின் வழித்தோன்றல்களே. தாம் ஆரியர் எனக் கூறிவருவது எல்லாம் வரலாற்றுத் திரிபுகள் .. !!//
    தூய வழித் தோன்றல்கள் அல்ல. ஆனால் பாரிய அளவில் தொடர்பு உண்டு. கட்டாயம் gene தொடர்பு காணப் படுகிறது . சிங்களவர்கள் ஆரியரே அல்லர். ஆனால் உயிரே போனாலும் அதை ஏற்கப் போவதில்லை.

    அதனால் தான் புதிய பௌத்தம் என அவர் உருவாக்கினார்.//
    அறிந்து கொண்டேன். நன்றி சகோ...

    ReplyDelete
  11. கூடவே பாதிரியார்களையும், இமாம்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் //
    ஆமாம். நான் நடுநிலை இல்லாமல் நடந்து கொண்டேன் சகோ. .. நாம் ஒரு சாராரையே தாக்கி பழகிவிட்டோம். மன்னிக்க வேண்டும் சகோ....

    ReplyDelete
  12. புத்தரின் பல் இலங்கையில் இருப்பதாக கூறப்படுகிறது உண்மையா? தெரியவில்லை. கொல்லமை,பிறருக்கு தீங்கிழைக்காமை, ஆசையே அழிவுக்கு காரணம் இவை அவரின் தத்துவங்கள். அதையெல்லாம் செய்துவிட்டு நாங்கள் உத்தமர் வழி வந்தவர் என்பது வீண்பெருமையே. அதுவுமில்லாமல் அவர் சிலையை வைத்து வழி பாடு செய்வதை கடைபிடிக்க கூடாது எனவும் சொன்னார் என நினைக்கிறேன். காலத்தின் கோலம் என்பதே நீங்க சொல்ல வந்த கருத்து சரியா ?

    ReplyDelete
    Replies
    1. அதை ஏன் கேட்கிறீர்கள் நண்பா? ஒரு பல் இருந்தால் பரவா இல்லை எத்தனையோ ( தூபிக்கு தூபி) இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள்.... ஆனால் தலதா மாளிகையில் இருப்பதாக பதிவுகள் உள்ளன. புத்தரின் பற்கள் எப்படி இலங்கைக்கு வந்தன என்பதை பதிவர்கள் யாராவது மூலமாகத்தான் அறிய முடியும்

      Delete
  13. தமிழத்தில் ஒரு காலத்தில் வேறூன்றிய மதம் அழிந்து போய்விட்டது ஆனால் இலங்கையில் இருப்பதாக சொல்வார்கள் அனைத்தும் செய்யப்படும் பாவங்களால் ஒன்றுகில்லாது போய்விடும் அவரின் கொள்கைகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி கலாகுமரன் . ஒவ்வொரு பதிவிலும் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

      Delete
  14. புத்தர் மூன்று முறை இலங்கை வந்தார் என்று சிங்கள நூலான மகா வம்சம் கூறுகிறது. புத்த பெருமான் நாகரிகம் அற்ற இயக்கர் , நாகர் வம்சத்தை ( நம்ம தமிழப் பயதான்....) அழித்து ஆரியர்கள் ( சிங்கள பௌத்தர்கள் ) சமயத்தை வளர்க்க வேண்டுமாம்.
    ( தமிழர்களை வந்தேறு குடிகள் என்று கூறுவதற்கு முரணாக அமையும் என்பதால் இயக்கரை , நாகரை தமிழர் என்று ஏற்றுக் கொள்வதில்லை சிங்களவர் )

    ,,,,,,,,,,,,

    அருமையான, ஆழமான வரிகள் நண்பா. மதங்கள் அந்தக்காலத்தில் அன்பையும், பரிவையும் வளர்க்க ஆயுதமாகவே பயன்பட்டது. ஆனால் அது இந்தக்காலங்களில் பிரிவையும், சமூக ஒற்றுமையை சீர்கெடுக்கவே பயன்படுகிறது என்பதை ஆழமாக கூறியுள்ளது வரவேற்கத்தக்கது நண்பா...


    தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா... தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்...

      Delete