ஒரு பக்கம் கடும் போக்கு வாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வந்தாலும் மறுபக்கம் தமிழர்களின் பிடி முழுமையாக நழுவி வருவதைக் காணும் போது கவலையாக இருந்தாலும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் நெஞ்சங்களை காணும்போது மனதுக்கு ஆறுதலாகத்தான் இருக்கிறது.
இனவாதம் என்பது அடிப்படை லட்சணங்களில் மாறாத பரிமாணம் உடையது. சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதங்கள் அதற்குக் கிடையாது.
( சிறுபான்மை இனவாதம் : தென் ஆபிரிக்க நிறவெறி ஆட்சி, வருணாசிரமம்..
பெரும்பான்மை இனவாதம் : இந்தி திணிப்பு, இலங்கை...)
தங்கள் இனம் சார்பான தகவல்கள் வரும்போது அதனை ,மட்டுமே ஊதிப் பெருசாக்குவதும் அதே மற்ற நேரங்களில் அடக்கி வாசிப்பதும் தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது . இலங்கையின் சிங்கள, தமிழ் பத்திரிக்கைகளும் இதே பணியை செவ்வனே செய்கின்றன .
தனது இனத்தவர்களிடம் தாங்கள் மட்டுமே ஏமாற்றப் படுவதாகவும் மற்றவர்கள் சுக வாழ்க்கை வாழ்வதாகவும் ஒரு மாயத் தோற்றத்தையுமே இவை உருவாகுகின்றன.
இலங்கை அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இலங்கையின் பகுதிகளிலும் வழங்கப் படும் ஆள் அடையாள அட்டையில் சிங்கள மொழியில் கட்டாயம் பெயர் அச்சடிக்கப் படும்.
சிங்களவர்களுக்கான அட்டையில் சிங்களத்தில் மட்டுமே இருக்கும் அதே வேளை தமிழர்களுக்கு மட்டும் கூடவே தமிழில் எழுதப் படும். இது ஓர வஞ்சனை என்பதும் இதில் ஒரு தேசிய மொழி புறக்கணிக்கப் படுவதாகவும் கூறியே இந்த வழக்கு.
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இந்த வழக்கை தொடர்ந்தவர் தமிழர் அல்லர். மஹரகம என்ற இடத்தை சேர்ந்த இசுரு கமகே என்ற 18 வயதே நிரம்பிய சிங்கள இளைஞன் ...
வழக்கின் தீர்ப்பு எக்கேடோ கெட்டுப் போகட்டும்... அடுத்த இளைய தலைமுறை இந்த வன்மம் கொண்ட சாபக் கேட்டில் இருந்து விடுபட்டு விடும் என்ற ஒரு சிறு நிம்மதியாவது கிடைக்கிறது அல்லவா?
வேடிக்கை என்னவென்றால் இந்த செய்திக்கெல்லாம் தமிழ் பத்திரிக்கைகள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. வழக்கம் போல இனவாதிகளால் அந்த இளைஞன் துரோகி எனப் படுவான்.... போனால் போகட்டும் ... அந்த இளைஞனுக்கு மனதார ஒரு நன்றியைக் கூறி விடுவோம்...