ஹட்டன் நகரச் சந்தியின் இரைச்சல் என் காதுகளை வழமையாகக் கிழிதெறிந்து விடும். ஏனோ அன்று ஏதோ வெறுமை மட்டும்தான் மனதை நிறைத்து வைத்திருந்தது. என் இயந்திர வாழ்கையில் இது எனக்குப் புதியதாகத் தெரியாவிட்டாலும் அன்றைய தினம் என் தன்மானம் முழுவதையும் விழுங்கி விட்டது போன்ற எண்ணம் ஊற்றெடுத்து இருந்தது.
கேடுகெட்ட சமூகத்தின் மேல்தான் ஆத்திரம் பொங்கி எழுந்தது. அது எல்லாவற்றையும் அடகுவைத்து முடிந்த பின்பு இறுதியாக அடகு வைப்பது மானத்தைதான். அவன் நேற்று வந்த நாய்! என்னைப் பற்றி என்ன தெரியும் அவனுக்கு? ஏதோ அவன் வேலைக் காரனிடம் கதைப்பது போலதானே கதைக்கிறான்? ஒரு கடாதாசியை இன்றே எழுதி அந்த வே.. மகனின் முகத்தில் வீசி எறிய வேண்டும். என் பட்டதாரித் திமிருக்கு வேலையா கிடைக்காது? என் வயதுக்காவது மதிப்பு தெரியுமா அவனுக்கு?
நான் அவனைவிட அதிகம் படித்திருக்கிறேன். அந்த எரிச்சல்தான் அவனுக்கு. என் திறமைக்கு விலை போகாத எனக்கு எவ்வளவு எரியும்? அவனைப் போல சிபாரிசுக்கு உயர்மட்டத்தில் ஒரு ஆளும், ஒண்டிக்கட்டை வாழ்க்கையும் எனக்கிருந்தால் அவன் என் செருப்பைதான் நக்க வேண்டும். "போக விருப்பம் இருந்தா முன்னால போ, இல்லாட்டி இறங்கு" பஸ் கண்டக்டர் சிங்களத்தில் கத்தினான். ஆத்திரம் பொங்கி எழுந்தது. 'ச்சே.. ஒரு பைக் வாங்கி இருக்கணும். ' காசு குடுத்துத்தானே போறோம்?
அழுக்கு ஆடையோடு ஒரு மனிதன் வந்து நின்றான். சில்லறை போடுவது என் கடமை போல... எதுவுமே பேசாமல் என் மார்புக்கு முன்னால் கையை நீட்டிக் கொண்டு நின்றான். "இல்ல" அவன் எதுவுமே பேசாமல் நகர்ந்தான். பின்வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவன் ஒருவன் 2 ருபாய் போட்டு விட்டு பெருமிதப் பட்டுக் கொண்டான். 'அப்பன் காசுதானே' . பிச்சைக்காரன் என்னை ஏளனமாய் பார்ப்பது போல இருந்தது. பீறிட்ட கோபத்தை அடக்கிக் கொண்டேன். சிறுவனை அறைய வேண்டும் போல இருந்தது.
"Tea ?"
"வேணாம்!" எதுவுமே சொல்லாமல் போய்விட்டாள்.
'ச்சே.. இவளால் தான் எல்லாம். பொறுமையாக நல்ல வேலை ஒன்று தேடி இருக்கலாம். இவங்கப்பன் தானே அவசரப் பட்டான். எங்கயாவது தள்ளி விட்டால் போதும் என்று நினைத்திருப்பான். '
அந்தாளைச் சொல்லிக் குற்றம் இல்லை. இவள் இல்லாவிட்டால் வாழ்க்கையா போய்விடும்? அப்போது உயிரே அவள்தான் என்றல்லவா இருந்தது ? தன் சாதித் திமிரெல்லாம் விட்டுவிட்டு அந்த மனுஷன் தியாகம் செஞ்சது மாதிரிதானே பெருமை?
நான் வேண்டாம். என் பிள்ளைகள் மட்டும் சொந்தம்! என்ன ஜென்மங்கள்? யார் மீது கோபம் என்றே தெரியாமல் தவித்தேன்.
நான் விட்டது சின்ன பிழைதான். கணக்கு சரிபார்க்கையில் ரெண்டு digit மாறி விட்டது. அதை அழகாய் சொல்லி இருக்கலாம். திரும்ப ஒரு file save பண்ண எவ்வளவு நேரமாகி விடும்?
அமில, புதிதாய் வந்த பொறுப்பதிகாரி. என்னை விட ஏழெட்டு வயது குறைய இருக்கும். ஒரு பிழை கண்டு விட்டு நாய் போலக் கத்தினான்.
"It's not even a hard work, Mr.Kugan. கம்ப்யூட்டர் முன்னாடிப் பாத்து type பண்ண graduate qualification தேவை இல்ல. எங்க வீடு tommy செய்யும். " அவனுக்குத் தெரிந்த தமிழில் என்னெனவோ கத்தினான். பியுன்கூட
என்னை எகத்தாளமாகப் பார்த்தான். " கேம்ஸ் விளையாடவா வர்ரிங்க? "
' உன்னைப் போல ponography பாக்க வரல" என்று ஓங்கிக் கத்த வேண்டும் போல இருந்தது.
"He is jealousy about you. You are smarter." மஞ்சுளா என்னைத் தேற்றினாளா, கிண்டல் செய்தாளா தெரியாது. ஆனால் I was hurt. சக மனிதர்களை மதிக்கத் தெரியாத, தகுதி அறிந்து பேசத் தெரியாத நபர்கள்.
பிரைவேட் கம்பனிகளில் வேலை செய்வது எதோ சுகவாசியாக இருப்பது போலதான் தெரியும். ஆனால் தான் தோன்றித்தனமாக ஏறிவரும் இலங்கையின் விலைவாசிக்கு முன்னால் எல்லாம் தூசுதான். செய்யும் தொழிலின் கௌரவத்துக்கு போலி முகத்திரை போட வேண்டும். வீட்டில் உள்ளவர்களுக்கும் அழ வேண்டும். நடுத்தர வாழ்கையின் வானம் பார்த்த கனவுக்கு யார்தான் பலியாகவில்லை? கை ஏந்த முடியாது! ஆனால் rich ஆக சிரிக்க வேண்டும். பிள்ளைகளைப் பொறுத்தவரை , அவர்கள் வசதியான பிள்ளைகளாக காட்டிக் கொள்ளவாவது வேண்டும்.
கௌரவம்! அது ஒன்றுக்கு தானே இவ்வளவும்? அதை அடகு வைப்பதென்றால்?
'பேசாமல் அந்த tea garden இல் சேர்ந்து விடலாம்! 2000 குறைந்தாலும் ராகவன் எனக்குத் தெரிந்த மனிதர்தானே? மரியாதையான மனுஷன். ' மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டேன்.
மணி பத்தடித்தது. "ப்பா..."
"என்னடா கண்ணா?"
"காசு கொஞ்சம் வேணும்பா..' மனதுக்குள் எதோ சிரித்தது.
"எதுக்குமா?" மழலைப் பேச்சு ஏதோ செய்தது.
" நம்மட மொண்டிசொரில.. " , "ம்ம்" ...
" கண்டி போறமே..." , "எதுக்குமா?"
"பார்க் போறோம்.. தலதா போறோம்.. அப்புறம் ..." குட்டி விரல்களை எண்ணிக் கொண்டான். " magic ஷோ.. ஹையா.. " கைகளை ஆனந்தமாய்த் தட்டிக் கொண்டான்.
எவ்வளவு என்று கேட்கத் தோன்றவில்லை. இந்த இங்க்லீஷ் pre -school பற்றி எனக்குத் தெரியும். சிரித்த முகத்துடன் அன்பாய்க் கறந்து விடுவார்கள். ஆனால் எங்களுக்கு நல்ல respect உண்டு. என் சம்பளத்தில் ஒரு கால் பங்கை நேர்ந்து விட்டுக் கொண்டேன். குட்டி அப்படியே நெஞ்சில் தூங்கிவிட்டான்.
அமிலவை நினைத்தால் முதுகில் ஏதோ ஊர்வது போல இருந்தது. 'வேலைனா அப்படிதான். '
இன்னொரு தடவை உங்களிடம் குறைப் பட்டுக் கொண்டால், என் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள் .
நன்றி!