Monday, November 26, 2012

மரணம் என்பது என்ன?

என்ன இது வரிக்குதிரை கொஞ்சம் நாள் காணாமல் போய் திரும்பி வந்திருக்கிறானே ... ஆன்மீகப் பணிக்கு போய் விட்டானா? மதம் பரப்பும் கும்பலில் சேர்ந்து விட்டானா?
( இந்த உலக அழிவுக்கு பயந்து?????)

இப்படி எல்லாம் தலைப்பை பார்த்தவுடன் சந்தேக வந்தால் தப்பே இல்லை..... ஆனால் நான் இங்கு பயனுள்ள ஒரு அறிவியல் தகவலை சொல்லத் தான் வந்துள்ளேன்...

அறிவியலும் சரி , ஆன்மீகமும் சரி ,... இன்னும் விடை தெரியாமல் மண்டையை சொறியும் முக்கியமான ஒரு புதிர் மரணம்.
ஆமாம்... உண்மையில் மரணம் என்பதை மருத்துவம் எப்படி தீர்மானிகிறது?

நம்ம ராமசாமி அவுட் ஆ? அப்டின்னு தீர்மானிப்பது எப்படி?
அது கொஞ்சம் சிக்கல் தான். ஏன் ?
மரணம் என்பதற்கு மருத்துவத்தில் வரைவிலக்கணம் இல்லை... அதான்.

" சுவாசம் மற்றும் உணர்வுகளின் மீள முடியாத நிரந்தர இழப்பு மரணம் என்று ஐக்கிய ராச்சியத்தில் மொட்டையாக ஒரு கூற்று உண்டு. ஆனால் பூரண விளக்கம் கிடையாது....
'The irreversible loss of the capacity for consciousness, combined with irreversible loss of the capacity to breathe'. 

ஒரு தேர்ந்த அனுபவம் மிக்க மருத்துவர் அதனை தீர்மானிப்பார்.
உடல் தன செயற்பாடு இழப்பது மரணம்... அதனை சில அறிகுறிகளை வைத்து அறிகின்றனர்.
அவை எவை எனத் தெரியுமா?

வெளிறல் ..
ஆங்கிலத்தில் இதை Pallor என்பார்கள். உடம்பில் வழமையாக ரத்த ஓட்டம் கூடிய பகுதிகள் சிவப்பாக இருக்கும் . இறந்த பின்பு நமது இரத்த ஓட்டம் செயலிழந்து விடுவதால் அந்த இடங்கள் வெளிறிப் போய்  விடும்.
நமது உடலில் வெப்பம் பரவ குருதியே காரணமாக இருப்பதால் உடல் சில்லிட்டுப் போய்  விடும்.  

அசைவற்ற தன்மை...
இது கொஞ்சம் நிச்சயம் இல்லாத விஷயம். இதை நம்பி அடக்கம் பண்ணப் பார்த்து  பல கல்லறைகளில்  உயிர்த்தெழுந்து ஓடினவர்கள் உண்டு.
ஆனால் ஒருவரின் மரணத்தை தீர்மானிக்க கட்டாயம் அவரின் அசைவற்ற தன்மை நிரூபிக்கப் படவேண்டும்... 
குறிப்பாக சுவாச அசைவுகள் இல்லாமல் இருக்க வேண்டும். 
ஒரு சிலருக்கு அந்த அசைவு சில நிமிஷம் இல்லாது போகலாம்.

திறந்த கண்கள்....
இது நமக்கு பரிச்சயமான ஒன்று... நம் தமிழ்ப் படங்களில் சாகும் நபர் இப்படிதான் சாவார்,... ஆனால் இறந்த ஒருவர் கண்களை திறந்த படியே சாவார் என்று கட்டாயம் இல்லை.
இந்நிலையில் கண்ணின் சுற்றயல் பகுதி கண்ணீர் முகிலால் சூழ்ந்து காணப் படலாம்..

நாடித் துடிப்பு ( Pulse )  இல்லாமல் போகும்... வழமையாக கையில் பார்ப்பது நமக்கு பரிச்சயம். ஆனால் மருத்துவ ரீதியாக கழுத்தில் ( Carotid ) , அதுவும் ஒரு நிமிடம் வரை பார்க்க வேண்டும். இது இல்லை என்றால்,,,
அன்னாரின் பூதவுடல்...

இதயத் துடிப்பும் அதே ஒரு நிமிடம் சோதிக்கப் படும்...
சுவாச அசைவுகள் கிட்டத் தட்ட 3 நிமிடங்கள் அவதானிக்கப் படும். 

கண்ணின் மணி சோதிக்கப் படும்... உங்கள் கண்ணை கண்ணாடி முன்பாக சென்று உன்னிப்பாக அவதானியுங்கள் . ஒரு டோர்ச் ஒளி உங்கள் கண்ணில் படட்டும் . கண்மணி சுருங்கும் . இது Corneal Reflex எனப்படும். இறந்த மனிதற்கு இதுவும் சோதிக்கப் படும்...

இவ்வளவும் பார்த்து முடிந்த பின்புதான் மரணத்தை முடிவு செய்வார்கள். ( எவ்வளவு கஷ்டம்? )
இம்புட்டும் இல்லை என நூறு வீதம் முடிவு பண்ணி விட்டுதான் டாக்டர் கண்ணாடியை கழற்றுவார்...
" சாரிங்க ... நாங்களும் எவ்வளவோ ட்ரை பண்ணினோம்....எல்லாத்துக்கும் சொல்லி அனுப்பிடுங்க..."

அப்படியும் ஏதாவது ஒரு விஷயம் நம்பிக்கை  தருகிற பட்சம் ,
" கோட் இஸ் கிரேட்... நம்பிக்கை வைங்க..." இதெல்லாம் சொல்கிறார்கள்... நீங்கள் அடிக்கும் டாக்டர் ஜோக் மாதிரி இல்லையாக்கும்....

குறிப்பு:
நேரம் இல்லாத கொடுமை... அன்பு நண்பர்களிடம் எதையும் பகிர்ந்து கொண்டு பல நாளாகி விட்டது... வரிக்குதிரை பூட்டானோ?? என்கிற சந்தேகமே வந்து விடக் கூடாது என்று தான் இப்படி ஒரு பதிவு. பயனுள்ளதாக இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்...

என்னுடைய வழமையான பதிவுகளைப் போல இது அமையாமல் இருக்கலாம். ஆனால் பதிவுகளை விட்டு விலகாமல் இருந்து விட வேண்டும் . கூடிய விரைவில் அதே உத்வேகத்தோடு பதிவுகளை அளிக்கிறேன்... 




Sunday, October 14, 2012

தமிழில் " ஒன்பது " என்ற சொல்லின் விதிவிலக்கு



தமிழின் குறியீடுகள் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை மட்டும் பார்த்தோம் . இப்போது ஒரு சிறு தகவலை மட்டும் விட்டுச் செல்கிறேன் .

தமிழில் இலக்கங்களுக்கான பெயர்கள் தனித்துவமானவை.
பாருங்கள்:
ஒன்று - ஒரு
இரண்டு - இரு
மூன்று - மு
நான்கு - நா ....

இவ்வாறு தொடரும் பெயர்களுக்கு தனித்துவமான ஒழுங்கும் அடிச் சொற்களும் உள்ளன. ஆனால் இந்த வரிசையில் சற்று வேறு பட்டு நிற்பது ஒன்பது மட்டும்தான். எப்படி?

' பது ' என்பது பத்தின் பெருக்கத்தை குறிக்கும் விகுதி. உதாரணமாக
இரு- பது = இரண்டு * பத்து
இவ்வாறே முப்பது , நாற்பது எல்லாமே...

எனவே ஒன்பது என்பது ஏதாவது ஒரு எண்ணின் 10 பெருக்கமாக அல்லவா இருக்க வேண்டும்?

இது தற்செயலாக இருப்பினும் தொடரும் இலக்கங்களை பாருங்கள் .
தொண்ணூறு 90,
தொள்ளாயிரம் 900

என் இந்த மாற்றம் அல்லது  முரண்பாடு ?
ஆய்வாளர்கள் அதற்கு இப்படி விடை தருகிறார்கள்.
ஏழு, எட்டு என்ற வரிசையில் 9 ஐக் குறித்த உண்மையான பெயர்

" தொன் " என்பதாம். ( சிலர் தொள் என்று கூறுகிறார்கள். )
இதன்படி 90= தொன்பது , 900 தொண்ணூறு, 9000 தொள்ளாயிரம் என வழங்கியதாம் .

காலப் போக்கில் எதோ ஒரு காரணத்தால் இது மருவி இன்றைய பெயர்கள் வந்து விட்டனவாம். என்ன ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறதா?

எது எப்படியோ உங்கள் குழந்தைகள் இனி இந்த கேள்வியை கேட்டால் இந்த விளக்கத்தை சொல்லுங்கள் . மேலும் தமிழில் இந்த தகவலும் எனக்குத் தெரியும் என மார் தட்டிக் கொள்ளலாம் அல்லவா? இந்த விஷயத்தை உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

Saturday, October 13, 2012

தமிழர் எண்முறை

தமிழில் எண்கள் பற்றிய அறிவு மிகத் தாராளமாக இருந்தது. இன்று உலகத்துக்கே வழங்கும் இந்து ( இந்திய) எண் முறையை வழங்கியவர்கள் நம் இந்தியர்கள்தான்.

மற்ற மொழிகளை விட சற்று மாறுபட்ட வளமான எண்  கணித முறைமை நம்மிடம் இருந்தது. மற்ற இந்திய மொழிகளினின்றும் சற்று வேறுபட்ட முறை.
இன்று நாம் பாவிக்கும் எண்மானம் 10 ஐ அடியாகக் கொண்ட நடைமுறைமை. நம்முடைய தமிழர் முறைமையும் அவ்வாறானதே. ( சீனர் 6 ஐ அடியாகக் கொண்ட எண்முறை பயன்படுத்தினர்)

123456789101001000
பார்த்தீர்களா ? நாம் எவ்வளவு வளமான முறையை கொண்டிருக்கிறோம்? இங்கும் சிறப்பாக 10, 100,1000 என்பவற்றை  குறிக்க நாம் சிறப்பு குறியீடுகளை  கொண்டுள்ளோம். மற்ற எந்த இந்திய மொழிகளிலும் இது இல்லை.

தமிழுக்கு இருந்த குறை தமிழில் சுழியம் (0) இருக்கவில்லை என்பதுதான். ஆனால் அதற்க்கு குறியீடு இருந்ததாக சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் .
ஆனால் 1825 இல் கணித தீபிகை என்ற நூல் மூலம் தமிழுக்கு 0 அறிமுகப் படுத்தப பட்டது.

வெறும் எழுத்துகள் மட்டுமல்ல .  எண்முறை சார்ந்த  நடைமுறைகளுக்கும் நம்மிடம் இருந்தன,
daymonthyeardebitcreditas aboverupeenumeral

ஆங்கிலத்தில் சுருக்கக் குறியீடுகள் போலவே இவையும் பயன் படுத்தப் பட்டன . நாம் at என்பதை @ என குறிப்போம் அல்லவா? அதற்கு சற்றும் குறையாத குறியீடுகள் தாம் இவை..துரதிருஷ்டவசமாக இவற்றை நாம் பயன்படுத்தத் தவறிவிட்டோம்.

பாருங்கள் ரூபாய்க்கு இந்தியாவில் குறியீடு அறிமுகப் படுத்த முன்னமே நாம் குறியீட்டைப் பயன் படுத்த தொடங்கி விட்டோம். ஆனால் தமிழர் ஒருவர் அமைத்த அந்த வடிவம் ஹிந்தி எழுது போல தமிழ் சாடை கொஞ்சமும் இல்லாது போனமை மிக்க வருத்தம்தான். ( அது ஹிந்தி போல இருந்தமையால்தான் இந்தியாவில் தெரிந்தெடுக்கப் பட்டது என்பது உண்மைதான். )


Rank1/41/23/41/51/81/101/161/201/401/80
Characterகால்அரைமுக்கால்நாலுமாஅரைக்கால்இருமாமாகாணி, வீசம்ஒருமாஅரைமாகாணி


முழு ,எண்கள் பற்றிய அறிவு மட்டுமல்லாது பின்ன எங்களுக்கும் நம்மிடம் பெயரீடு இருந்துள்ளது. தமழர்களின் எண் அளவை முறை என்று தனியாக நாம் கற்க வேண்டிய அம்சங்களும் உள்ளன.

தமிழ் எண்களை பயன்படுத்துமாறு நான் இங்கு கேட்க காரணமும் உள்ளது. பொது  வழக்கில் நம்முடைய முறையை பயன்படுத்துவது சாத்தியப் படாது. ஆனால் தமிழ் பற்றிய தமிழர் ஆக்கங்களில் இதனை பயன்படுத்துவோமானால் நமது தமிழ் ஆர்வம் பெருகும் . இன்று தமிழ் படிக்கும் பலருக்கு இந்த குறியீடு முறைமை தெரியாது. நாமே அதனை தெரிந்து கொள்ளாவிட்டால் யார் தெரிந்து கொள்வது?

ஒரு மொழியில் அளவை முறை காணப் பட்டது, எண் முறை தனித்துவமானது என்று இருப்பது அம்மொழியின் வழமையை ஆய்வாளர்களுக்கு புலப் படுத்தும். எனவே பயன்படுத்தாவிடினும் நமது முன்னோரின் சில விழுமியங்களை அறிந்தாவது வைத்திருப்போம்...


நன்றி விக்கி

Update:

பதிவின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லி விட்டேன். இதோ தனித்தனியாக கூறுகிறேன். 

இது உங்களுக்கு பரிச்சயமான பிள்ளையார் சுழி. இந்தக் குறியீடு நாளைக் குறிக்க பயன்பட்டது. 

௳ 

மாதம் -   

வருடம் - 

பணம் - 

ரூபாய் - 

மேற்கூறியவாறு - 

இலக்கம் - 

இவ்வாறு நிறைய குறியீடுகள் பயன்பட்டுள்ளன. அனைத்தும் தமிழ் மொழியின் எழுத்துகளை அடிப்படையாக கொண்டு கட்டி எழுப்பப் பட்டுள்ளன . எங்கும் கடன் வாங்கப் படவில்லை. 

உதாரணமாக NO என்பது ஆங்கிலத்தில் number என்பதை குறிக்கும். இது Numero  என்ற சொல்லில் இருந்தது வந்தது .இது ஆங்கிலமே அல்ல . மாறாக நம் அணைத்து குறியீடுகளும் நமக்கே உரிய சொற்கள் இதனை தொடர்ந்து பயன் படுத்தி இருந்தால் சுருக்கத்துக்கு   மிக உபயோகமாக இருந்திருக்கும் . மேலும் பலவற்றை நாமே உருவாக்கி இருக்கலாம் ... மாறாக நாம் இன்று பிற மொழிகளில் கடன் வாங்க வேண்டியிருக்காது. 
 ...

Update 2


நண்பர் கலாகுமரன் அளித்த முகப் புத்தக படத்தை பாருங்கள் ... தமிழரின் பெருமையையும் உணருங்கள்... 

நன்றி... 

http://www.facebook.com/photo.php?fbid=478097962224610&set=a.433127040055036.101038.433124750055265&type=1&theater


Tuesday, October 9, 2012

" குட்டி " என்று ஒரு அருமையான திரைக்காவியம்

" குட்டி " திரைப்படம் ஒரு கண்ணோட்டம்

தமிழ் சினிமாக்கள் பலவிதம்,.. ஒரு சில திரைப்படங்கள் வந்து ஒரு சிலநாளில் காணாமல் போய்  விடுகின்றன. சில மனதில்  பதிந்து அழியாத இடம் பிடிக்கின்றன .அப்படி  மனதில் நீங்காத இடம் பிடித்த திரைப்படம் குட்டி.



ஐயோ ....
சத்தியமாக இந்த குட்டி அல்ல....
////////



இந்தக் குட்டி...

தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு போக்கு காணப் படும். ஒரு வெற்றிப் படம் வந்து விட்டால் அதே சாயலில் தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் குவியும். ஹாலிவூட் திரைப்படங்களுக்கும் நமக்கும் இது தான் பாரிய இடைவெளி. அங்கும் குப்பைத் திரைப்படங்கள் எக்கச்சக்கமாக உண்டு. ஆனால் நான் சொல்ல வந்தது அதை அல்ல...'

அங்கு திரைப்படங்களில் variety நிறையவே உண்டு. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள், முழு வணிக ரீதியிலான படங்கள், சண்டைப்படங்கள், சூப்பர் ஹீரோ கதைகள் என்று விதவிதமாக வரும், பார்க்கும் ரசிகனின் ரசனையை பன் முனைகளை உடையதாக மாற்றும். ஆனால் துரதிருஷ்டவசமாக நமது படங்களில் இந்த ஹீரோ இதான் பண்ணப் போறார்னு முடிவெடுத்து விட்டே போகின்ற நிலைமை.

( இப்போது நிறைய விதிவிலக்கான திரைப்படங்கள் வருகின்றன... அதனை நிச்சயமாக வரவேற்போம்)

*******

ம்ம்.. இப்போ நம்ம விஷயத்துக்கு வருவோம். சினிமா என்பது ஒரு பிரமிப்பு இலக்கியம்... அந்தக் கலை நம்மை 2 மணிநேரம் மெய்மறக்க வைத்து கதையோடு  ஒன்ற வைத்து விட்டால் அந்தக் கலை வென்று விட்டது என்றுதான் அர்த்தம்... எனவே நல்ல படம், குப்பைப் படம் என்பது அவரவர் மனப்பாங்கைப் பொறுத்தது. எனவே அந்த முடிவுகள் உங்கள் கையிலேயே விட்டு விடுகிறேன்.

2001 இல் வெளிவந்து என் மனதில் அழுத்தமாக பதிந்த குட்டி திரைப்படத்தைப் பற்றிதான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

*******

தமிழ் சினிமாவில் நான் பெரும் வருத்ததோடு பார்க்கும் ஒரு விடயம் சமகால பிரச்சனைகளை மையப் படுத்திய திரைப்படங்கள் மிகக் குறைவு.  வன்முறை,காதல், இளைஞர் பற்றிய திரைப் படங்களோடு ஒப்பிடுகையில் சமூக பிரச்சனைகள் பற்றிய திரைப்படங்கள் சார்பளவில் மிகக் குறைவு. அதிலும் கூட காதல், வன்முறைகள் மிகைப் படுத்தியே காட்டப் படுகின்றன.

( அல்லது கதாநாயகர்கள் ஆயுதங்களை தூக்கிக் கொண்டு உலகை மாற்றப் புறப்பட்டு விடுகிறார்கள். இதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும் ,ரசிகர்களுக்கும் தெரியும். அதைப் பற்றி  இங்கு பேசினால் ரசிக உள்ளங்கள் கொதிப்படைந்து பதிவின் நோக்கமே  மாறிவிடும். ஆகவே அது நமக்கு வேண்டாம்.)

திரைக்கதை 

கிராமத்தில் சுதந்திரமாக திரியும் குட்டிப் பட்டாம்பூச்சி அவள் ... உழைப்பாளிகளை பீடித்த வறுமை மட்டுமே அவளை தத்தெடுக்கிறது .
வெறுமையாகிக் கிடக்கும் பணத்தை ஈடு செய்ய மனம் நிறைய அவள் மீது அன்பைப் பொழியும் தந்தை.  தன அன்பு முழுவதையும் குட்டி மீது கொட்டும் தந்தை. அவளது உலகை சிரியதாக்குகிறான் ... சொர்க்கமாக்குகிறான்.







வறுமை அவள் கண்களுக்கு தெரிவதே இல்லை. அவள் வாழ்க்கையில் அவளின் பிஞ்சு ஆசைகள் கனவாகவே இருப்பதை அவள் உணருவதும் இல்லை. கிராமத்து சூழல், இயற்கையோடு அவள் ஒன்றி விடுகிறாள். மொத்தத்தில் அவளுக்கு எந்தக் குறையுமே இல்லை. அந்த நாள் வரை...

இடியென வந்து விழுகிறது தந்தையின் இழப்பு. அவளை சுமந்த அவனின் இழப்பு அவளது வாழ்வை திசை மாற்றுகிறது .

அவளின் குழந்தை உள்ளம், கிராமிய வாழ்க்கை , மகிழ்ச்சி அனைத்துமே அவளிடமிருந்து முற்றாக பறிக்கப் படுகின்றன. நகரத்தின் ஒரு பணக்கார வீட்டுக்கு வேலைக்கு அழைத்து வரப்படுகிறாள். அவள் இது வரை கேள்விப் படாத புதிய உலகத்தில் நுழைகிறாள் ...

நகரத்தின் வேகம், வளர்ச்சி, பிரமிப்பு அனைத்தும் அவளுக்கு புதியவை. வானுயர நிற்கும் கட்டிடங்களை அவள் அண்ணாந்து பார்க்கிறாள் ... அவள் இது வரையில் கனவிலும் கண்டிராத பொருட்களைப் பார்க்கும் பொது அவளுக்குள் இனம் புரியாத ஆச்சரியம் .

வேறு ஒரு குழந்தையாக இருந்தால்  இந்த புதிய சூழலை பெரும் ஏமாற்றத்தோடு  எதிர்கொண்டு இருப்பாள். ஆனால் அவள் காட்டுச் செடி . வலிகளை சுகமாக ஏற்கும் மனப் பக்குவம் அவளுக்கு உண்டு. ஏராளமான ஏழைகளைப் போலவே அந்த புதிய இடத்தில் அனுபவமாக ஏற்கும் பக்குவத்தை  ஏற்கிறாள்.






அந்த குடும்பம் பணத் தேடல்களுக்காக நேரத்தை அடகு வைத்து விட்ட ஒரு சராசரி நகர்ப்புறக் குடும்பம். வீடு வேலைகளை முடிப்பதட்கோ குழந்தைகளை கவனிக்கவோ நேரமில்லாத அக்மார்க் மேல்தட்டு வர்க்கம் . ஆனால் அந்தக் குடும்பம் குட்டியை தங்களின் ஒருத்தியாகவே ஏற்றுக் கொள்கின்றனர் .

புதிய ரோஜாவில் மலரை மட்டுமே பார்க்கிறாள் குட்டி. தன வயதுக்கு மீறிய பெண்மையை , முதிர்ச்சியை அவளாக ஏற்றுக் கொள்கிறாள். அதுவும் விரும்பி ஏற்றுக் கொள்கிறாள். இந்த குடும்பம்  என்ற உணர்வை அடைகிறாள் . புதிய உடைகள் , நல்ல உணவு என்ற புதிய அனுபவத்தில் பூரிப்பு கொள்கிறாள்.  நன்றாகவே போகிறது . அந்த குடும்பத்தின் வயதான் பாட்டி வந்து சேரும் வரை.





முதன் முதலாக தான் ஒரு அடிமை என்பதை குட்டி உணர்கிறாள் , பிஞ்சு உள்ளம் வாடும் வரை கொடுமைப் படுத்தப் படுகிறாள் .
பொறுத்துப் பார்க்கும் குட்டி எப்படியாவது தன தாயுடன் சேர்ந்து விடவேண்டும் என தன மேல் அன்பு காட்டும் கடைக்காரனிடம் கெஞ்சுகிறாள் . தன ஊர் பேர் கூட தெரியாத அவள் வழி தெரியும் வண்டியேற்றி மட்டும் விடுங்கள் என வேண்டுகிறாள் .

மறுநாள் அந்த கடைக்காரனை காணாமல் முன்கடை மனிதனிடம் உதவி கோருகிறாள். அவனும்  வண்டியில் ஏற்றி விடுகிறான்.
ஆனால்...????

விருதுகள் 

2002 ஆம் ஆண்டு கெய்ரோ சிறந்த சிறுவர் திரைப்படத்துக்கான விருதைப் பெற்றுக் கொண்டது.

இரண்டு தேசிய விருதுகள். 2002
சிறந்த குழந்தை நட்சத்திரம்   குட்டியாக நடித்த ஸ்வேதா.
சிறந்த இயக்குனர் சிறப்பு ஜூரி விருது ஜானகி விஸ்வநாதன் .

முக்கிய அம்சங்கள் 

கதையின் இசை இளையராஜா . படத்தில் அது எவ்விதமான தாக்கத்தை  இருக்கும் என சொல்லவே வேண்டாம்.

கதையில் எனக்கு மிகப் பிடித்த விஷயம் , கதை யதார்த்தத்தை விட்டு துளியும் அசையவில்லை . கதையின் போக்கிலும் சரி, முடிவிலும் சரி.

அன்றாடம் கதையில் வரும் அத்தனை  கதை மாந்தர்களையும் நாம் கடக்கிறோம் . எத்தனை சிறுவர் தொழிலாளிகள் ? அவர்கள் அவர்களின் வயதுக்கு மீறிய பொறுப்புகளால் திணிக்கப் படுகிறார்கள். ஏற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள். குட்டி கதாப் பாத்திரம் உருவாக்கப் பட்டது அன்று . நம் முன் நடமாடுவது வளரும் நாடுகளின் சாபக்கேடு.

அந்தப் பாட்டி கொடுமைக்காரியாக வில்லியாக தெரியலாம் . ஆனால் நமது எத்தனை வீடுகளில் அவ்வாறான பாத்திரங்களை சுமக்கிறோம்? வயது கூடிய மாமியார்கள் , பாட்டிகள் சர்வாதிகாரிகளாக உலவுவதை நாம் சற்று ஆராயப் போனால் ஒரு புத்தகமே போடலாம் , மனோ தத்துவம் பற்றி....

குழந்தை தொழிலாளிகள் என்ற எண்ணக்கருவே தப்பு .. அதில் நாம்  அவர்களை நன்றாகத் தானே பார்க்கிறோம்? கொடுமைப் படுத்தவில்லை என்ற பேச்சு பிழை .... சிறுவர் உழைப்பு சந்தேகமே இல்லாமல் ஒழிக்கப் பட வேண்டும் ,....

சமீபத்தில் அங்காடித்தெரு என்று ஒரு சமூகப் பிரச்சனை பற்றி பேசும் நல்ல சினிமா.. ஆனால் அதில் கூட வணிக ரீதியாக சில விஷயங்களை நுழைக்க வேண்டிய தேவை நமக்கு இருப்பது வேதனையான விஷயம்தான் .

குட்டி இப்படி எந்த வணிக அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை .
குறுகிய நேரப் படம். வெறும் 118 நிமிடங்கள்தான். ஆனால் நமது வழமையான 3 மணி நேர படங்கள் தராத மன நிறைவை முழுமையாக தருகிறது.

பங்களிப்பு

குட்டி வேடத்தில் ஸ்வேதா எனும் தேவதை . அசத்தி இருக்கிறாள் . மகளாக பாசம், கிராமத்துக் குழந்தையாக வெகுளித்தனம் , ஏழையாக ஒரு முதிர்ச்சி என முகபாவங்களில் அசத்தி விட்டாள் .

தந்தை வேடத்தில் நாசர் . குறைந்த நேரத்தில் மனதில் நிற்கிறார் . கடையில் பொறுப்பாளராக குணச்சித்திர வேடத்தில் விவேக்.  மனிதாபிமானம் மிக்க ஒரு சராசரி பாத்திரம் ... அது சமூக அவலங்களை ஏக்கத்தோடு பார்க்கும் . ஆனால் அதனால் எதையும் சாதிக்க முடியாது... மனதைத் தொட்டு சொல்லுங்கள் , அது நீங்கள்தானே? அல்லது நான்தானே?

அந்தக் குழந்தையின்  கஷ்டத்தை  சகிக்கவும் முடியாமல் , எதுவும் செயவும் முடியாமல் தடுமாறும் போது புதிய தளத்தில் விவேக்.  இரட்டை அர்த்த வார்த்தைகளோடு  வருபவரா இவர்?

 பாட்டியாக எம்.என்.ராஜம் . அப்பப்பா.... கதையோட்டத்தை தூக்கி நிறுத்துபவர் இவர்தான் . கதையில் மிகக்  குறைவான பாத்திரங்கள்தான். ஆனால் அவை போதும் இந்த நல்ல கதைக்கு. படம் முழுவதும் அவர் மீது  வெறுப்பு வருமளவு தன நடிப்பை அள்ளிக் கொட்டி உள்ளார் ராஜம்.

கதை எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுடையது. இவ்வாறான சமூக பிரச்சினையை ஆழமாகவும் அழுத்தமாகவும் தந்த அந்த படைப்பாளிக்கு நன்றிகள் .

ஜானகி விஸ்வநாதன் இந்த திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். அருமையான ஒரு திரைகாவியத்தை தந்த அவருக்கு வாழ்த்துகள்.

********

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம். பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த நான் அதே நினைவோடு மீண்டும் பார்க்காமல் விமர்சன செய்கிறேன். அது அந்த திரைகதையின் எவ்வளவு பெரிய வெற்றி?

வசூல் பற்றி தெரியவில்லை . தெரிந்தால் கோடிட்டுக் காட்டுங்கள் . ஆனால் இப்படி ஒரு நல்ல முயற்சியை அறிமுகப் படுத்தும் பொது அது தேவை இல்லை என நினைக்கிறேன்.

இந்த திரைப்படம் பார்க்கும் பொது எனக்கு 13 வயது இருக்கலாம் .
" ஏம்பா? குட்டியை இன்னொரு வீட்டுக்கு வேலைக்கு அனுபிட்டானா அந்த கடைக்காரன்?"

அதற்கு குட்டி எங்கு செல்கிறாள் என அப்பா சொன்ன போது மனதில் ஏற்பட்ட வலி .... அன்று  முழுதும் குட்டியை நினைத்து நான்  தூங்காததும் என் தலையணை நனைந்ததும் இன்னும் ஞாபகம் இருக்கிறது. இன்னொரு குழந்தைக்காக குழந்தையாக நான் முதல் தடவை அழுதது அன்றுதான் ....



நீங்கள் இந்த படத்தை தவற விட்டிருந்தால் மறக்காமல் ஒரு முறை பார்த்து விடுங்கள். 
********





பின்குறிப்பு:

உனக்கு தமிழ் படம்  பாக்க வராதோ ? இங்கிலீஷ் விமர்சனம்  எழுதுற அளவுக்கு அப்படக்கரோ நீ? அப்டின்னு ஒரு நண்பன் கேட்டதாலோ , அல்லது...

நீ ரெண்டு தரம் அதும் subtitle போட்டு இங்க்லீஷ் படம் பாத்துட்டு எதோ உலக சினிமாவை கரைச்சு குடிச்சவன் மாறி விமர்சனம் எழுதுறியா? அப்டின்னு இன்னொரு நண்பன் சிரிச்சதாலோ இந்த விமர்சனம் அவசர அவசரமாக எழுதப் பட்டது என்று நீங்கள்  நினைத்தால் அதற்கு  நிர்வாகம்  பொறுப்பல்ல,,,
ஹீ.. ஹீ....








Friday, September 28, 2012

இந்த முறை உலகக் கிண்ணம் நிச்சயமாக இவர்களுக்கே...

முதலில் நான் ஒன்றை சொல்லி விடவேண்டும் . கிரிக்கெட் பற்றி எழுதும் போது  சில வருடங்கள் முன்னே போக வேண்டி உள்ளது. துணைக் கண்டத்தில் வாழும் சராசரி குடிமகனைப் போலவே நானும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன்... ( வெறியன் என்பது இன்னமும் பொருத்தம்.)

நான் வெறித்தனமாக ரசிக்கும் ( நேசிக்கும்)  விஷயங்கள் சில உண்டு...
திரைப்படங்கள், ஆங்கில நாவல்கள் , வலை பூ, கிரிக்கெட் இப்படி... எக்ஸாம் நேரங்களில் இவற்றை கள்ளத்தனமாக அனுபவித்த அனுபவம் ஏராளமாக உள்ளது.

இலங்கை இந்தியா  பங்கு கொள்ளும் ஐந்து நாள் டொக்கு டெஸ்ட் மாட்சை கூட பந்து விடாமல் பார்த்த அனுபவம் உண்டு...
கிரிக்கெட் ஒரு சோம்பேறி  விளையாட்டு, அதை பார்ப்பதால் எந்த பயனும் இல்லை என்ற என் அம்மாவின் வாதம் வலுப் பெற காரணமும் இதுதான்.

ஆனால் t 20 வந்த பின் ஓரளவு ஆறுதல். விறுவிறுப்பான போட்டிகள், உடனடி முடிவுகள் என கிரிக்கெட் மாறியே போனது போங்கள் ... சரி இந்த முறை உலகக் கிண்ணம் யாருக்கு என்றுதான் வாய்ப்பு பார்த்து விடுவோமே...

தமிழ்நண்பர்கள் பகுதியில் ஓட்டுப் பட்டை வைத்தபொது இந்தியா  தான் நம்பர் 1 . அது பாசம். ஆனால் வரிக்குதிரை நேர்மையானவன் ??? என்பதுதான் உலகமே அறிந்த உண்மை ஆகிற்றே? நான் உண்மைதான் சொல்வேன்.

இந்தியா

சந்தேகமே இல்லாமல் கோப்பையை வெல்ல முந்திக் கொண்டு நிற்பவர்கள் இவர்கள்தான்... இப்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு சுக்கிர தசை... உலகக் கோப்பை, அதற்குப் பின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை என்று வரிசையாக பதக்கங்கள்.. இப்போதைக்கு வெல்லாமல் விட்ட கோப்பைகளே இல்லை.... இந்திய அணியின் அசுரத் துடுப்பாட்ட பலம் எல்லா அணிகளையும் கிலி  கொள்ள வைத்திருப்பது உண்மைதான்..

வலுவான அதிரடி துடுப்பாட்ட வரிசை, தோனியின் தலைமைத்துவம் , இளம் வீரர்கள்,குறைவில்லாத சாதனை துடுப்பாட்டக்காரர்கள் இப்படி பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்...

பலவீனம் என்றவுடன் சட்டென ஞாபகம் வருவது பந்துவீச்சு.. மிகப் பலமான பாட்டிங் மூலமே பந்து வீச்சு பாதுகாக்கப் படுகிறது என்பதே உண்மை. மூத்த வீரர்களுக்கு இடையில் அடிக்கடி ஏற்படும் உரசல் ,தெரிவுகளில் காணப் படும் குழப்பம் என்பவற்றைத் தாண்டினால் மிக வலுவான அணி..

பாகிஸ்தான் 

இவர்கள் வலுவான அணியா இல்லை மொக்கை அணியா என்பது யாருக்குமே எப்போதுமே தெரியாத ரகசியம்... அந்தளவு பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள் சில நேரம் நொந்துதான் போவார்கள்... ஆனால் திறமைக்கு பஞ்சமே இருக்காது . உலகுக்கு மிகச் சிறந்த வீரர்களை பாகிஸ்தான் அணி தந்திருக்கிறது..

சூதாட்டம், அணித் தகராறு என்று சர்ச்சைகளுக்கு பஞ்சமே இலாத அணி. 
அஜ்மல்,அப்ரிடி, ஹபீஸ் போன்ற அருமையான வீரர்கள் மட்டும்தான் பலம். எந்த நேரத்திலும் அதிர்ச்சி அவதாரம் எடுக்கும் இவர்களின் திறமை போதும் இவர்கள் மீண்டும்  கிண்ணத்தை சுவீகரிக்க ,... ஆனால் நடக்குமா என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும். 

பலவீனம்? சொதப்பல் பீல்டிங் , சர்ச்சைகள், அணிக்குள்ளே முட்டி மோதல், நிலை இல்லாத அதிகாரம் இலாத அணித்தலைமை என்று அடுக்கலாம்.. 
ஆனால் திறமை அடிபடையில் மிகவும் திறமையான அணி...

இலங்கை 

எவ்வளவு இலகுவான ஆட்டத்தையும் கஷ்ட பட்டு இறுதியாக தான் ஜெயிப்போம் என்பது இவர்களின் தாரக மந்திரம். ஒரு முறை மிகச் சிறப்பாக ஆடி இறுதிப் போட்டிக்கு சென்றதும் சென்ற உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டிக்கு சென்றதும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அணியின் மிகப் பெரிய பலம் அணி வீரர்களின் ஒற்றுமை. எந்தக் காலத்திலும் கூட்டு முயற்சி காரணமாகவே இலங்கையின் பல வெற்றிகள் பெறப் பட்டன. வீரர்கள் குறித்த தனிப்பட்ட கவனிப்பு, மூத்த வீரர்களின் ஒற்றுமை, டில்ஷான்,மகேள,சங்கா ஆகியோர்தான் மிகப் பெரிய பலம். இது தவிர சகல துறை வீரர்களை கொண்டிருப்பது இந்த முறை வரப்பிரசாதம்.

பலவீனம் என்று பார்த்தால் இளம் வீரர்கள் பற்றாக் குறை, அணி மூத்த வீரர்கள் கையிலேயே தங்கி இருப்பது அதிரடியில் இருக்கும் குறைபாடு முக்கியமாக மத்திய ஓவர்களில் மிகவும் மந்தமான ஓட்ட வீதம்...

சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால் இந்த முறை கிண்ண வாய்ப்பு பிரகாசமாகவே உண்டு எனலாம்..

தென் ஆபிரிக்கா 

ஆசிய அணிகள் மீதுள்ள காதலால் அவர்களை முதலில் குறிப்பிட்டேன். ஆனால் இவர்களை தான் முதலில் சொல்லி இருக்க வேண்டும் எமகாதகர்கள். அதுவும் இப்போதைய சூழலில் இந்த அணியை நினைத்தாலே நடுங்குகிறது. இன்னைக்கு தேதிக்கு t 20 நம்பர் 1 இவர்கள்தான் .

வெறும் சமநிலை இல்லை. எல்லா வீரர்களும் உச்சகட்ட போர்மில் இருந்தால் என்ன செய்ய? Ab , ஸ்டைன் ,  அம்லா , மோர்கல் என எல்லாருமே போர்மில்.

பலம் என்றால் எங்கிருந்து தொடங்கி எங்கே முடிப்பது என்று தெரியவில்லை... நீங்களே சொல்லுங்களேன்...

பலவீனம் ??? அப்படி ஒன்னு இல்லை....
ஆங் ,
ஒரே ஒரு விஷயம் . சந்தானம் பாணியில் சொல்லனும்னா...
கப் உக்கும் எனக்கும் ராசியே இல்லப்பா...

இது நான்  சொல்ல வேண்டியதில்லை. இந்த சோகம் இப்போ தொடங்கவில்லை. க்ளுச்னரின் அந்த ஒத்தை ஆள் ஆட்டம் ஞாபகம் இருக்கா? 1999 இல். அந்த உலகக் கிண்ண tie  யாராலும் மறக்க இயலாத சோகம். அதற்குப் பின் 2007 இலங்கை அணியுடன் தோற்றது??? இப்படி நிறையவே சொல்லலாம்.

மற்றபடி அவுஸ்திரேலியாவின் 431 சாதனையை உடைத்து கரி  பூசினவர்கள்  ஆகிற்றே ?
என்னை விட்டால் நான் தென் " ஆபிரிக்க அந்தாதியே " பாடுவேன்.

நான் மட்டும் நேர்மையானவனா இருந்தா ( ஐயையோ உளறிட்டேனே ...) யாருக்கு வாய்ப்பு கூட என்றால் இந்த அணிக்குத்தான் கை நீட்டுவேன். நீங்கள்?

அவுஸ்திரேலியா 

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது இவர்களுக்கு இப்போது பொருந்தும். உலகத்தின் கிரிக்கெட் சர்வாதிகாரிகள் அண்மையில் அடங்கித்தான் இருக்கிறார்கள்,
யார் கண் பட்டதோ தொடர் தோல்விகள், t 20 பின்னடைவு என்பவற்றால் மிக நொந்து உள்ளார்கள். ஆனால் தூங்குற சிங்கம் எப்போ எழும்பும் என சொல்லவா முடியும்? 

தலைமை , பாடிங் பந்துவீச்சு என எல்லாவற்றிலும் கலக்கு வாட்சன் , ஹஸ்ஸி என்பவர்கள், அதிரடிக்கு ஒரு டீம், நிதானத்துக்கு ஒரு டீம் என எல்லா விஷயங்களுக்கும் specialist  நிறைய பேர் உள்ளதுதான் மிகப் பெரிய பலம்.

பலவீனம்? மோசமான சமீப கால போர்ம் . போதாக் குறைக்கு இருபது ஓவர் போட்டிகளில் இந்த அணியின் தரவரிசை மிகப் பின்னாலே..என்னதான் இருந்தாலும் இவர்களுக்கு வாய்ப்பு நிச்சயமாக உண்டு என்பதை மறுக்கவே முடியாது. 

மேற்கிந்திய தீவுகள் 


இந்த முறை வழமைக்கு மாறாக மிகவும் பலமாக   அணி. அணியின் உள்வீட்டு  பிரச்சனைகள் முடிந்தது மிகப் பெரிய ஆறுதல்..

அணியின் மிகப் பெரிய பலம் என்றதும் கய்ல் மீள்வருகை.. அந்த மனுஷர் உள்ளே வந்தது அவர்களின் பலத்தை மிகப் பெரிய பலம் . இது தவிர  நரேன் , அதிரடித் துடுப்பாட்டம் பல சகல துறை வீரர்கள் என புத்துணர்வுடன் களமிறங்குகிறார்கள் .

தலைமை , பந்து வீச்சு கொஞ்சம் வீக் தான்.. 

மிக மிக நீண்ட காலத்துக்கு பிறகு மினி உலகம் வென்று சாதிதார்கள் ...  இம்முறை? பொறுப்போம்...

இங்கிலாந்து 


அடிபட்ட புலிதான் பாயும் என்பார்கள். யூவி கையால் 6 சிக்ஸர் வாங்கின மனிதர் ப்ரோட்  இம்முறை இங்கிலாந்து கேப்டன். கிரிக்கெட் தாயகம் இப்போ கொஞ்சம் பின் தங்கிதான் இருக்கிறது. 

பலம் என்று பார்த்தால் நல்ல வீரர்கள் , மோர்கன், ஸ்வான் , திறமையான துடுப்பாட்டக் காரர்கள் இப்படி நிறைய உண்டு..

பலவீன? 
சும்மா சின்ன தகராறுக்காக அணி பீட்டர்சனை இழந்தது மகா தவறு.. IPL இல் அவர் ஆடிய தாண்டவத்தை மறக்க இயலுமா? அதனால் ரொம்பவே தவிக்கிறது அணி. மேலே சொன்ன நல்ல வீரர்கள் பலரும் அவுட் ஒப் போர்ம்

இந்த முறை வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான். 
ஆனால் மர்மதேசத்திலும் கிரிக்கெட்டிலும் " எதுவும் நடக்கலாம்". 

நியூசலாந்து 

இந்த முறையும் பேரு மூச்சோடு காத்திருக்கிறது. t 20 என்றாலே முதலில் மக்கலம் தான். மத்தவங்களாம் பின்னாலதான். ஆனால் என்ன  செய்ய ? இது வரை சாதிக்க முடியவில்லையே?

பலம் என்று பார்த்தால் துடுப்பாட்டம் பந்துவீச்சு களத்தடுப்பு என எல்லாம் சமநிலை பெற்ற அணி. 

பலவீனம் மேலே உள்ள எல்லாவற்றையும் திருப்பி போட்டுக் கொள்ளுங்கள். ஏதாவது ஒன்று சரிவந்தால் மற்றதை சொதப்பி விடுவார்கள். 
அணித்தலைமை? 
என்னத்தை சொல்ல? ம்...
மேலே உள்ள முகத்தை பார்த்துக் கொள்ளுங்கள். 

சரி கோப்பை யாருக்கு? 
அதானே ?
மேலே உள்ள 8 அணிகளில் ஒன்றுக்குத்தான்  ...
சத்தியமா...( ஹீ ஹி.. எதா இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்..)

அப்புறம் நேர இடர் காரணமா ஆய்வுக் கட்டுரை எழுத முடியல .. ஆனால் முடிஞ்சா வரை மத்த ப்ளொக்ஸ் வாசிசுக் கிட்டேதான் இருக்கேன்..
பதிவு ஏதும் போடாமல் இருந்தால் நண்பர்கள் கிட்ட இருந்து அன்னியமாகின மாறி ஆகிடுது...

விட்டத்தை பார்த்து மல்லாந்து படுத்த பொது சற்றே என் எண்ணத்தில் உதித்தது இந்த யோசனை.

சைடு பாரில் கருத்துக் கணிப்பு வைத்திருக்கிறேன். மறக்காம உங்கள் ஓட்டை போடுங்க... உங்கள் ஒட்டு வரிகுதிரைக்கே...


Saturday, September 15, 2012

இலங்கையை அதிர வைத்த முக்கொலைகள்

பதிவுலகச் சகோதரர்கள் யாராவது பகிர்ந்து கொள்வார்கள் என்று நினைத்தேன்... ஆனால் நான் தேடிய வரையில் அவ்வாறான பகிர்வு ஒன்றை காணவில்லை. கவர் ஸ்டோரி எழுதும் ஆர்வம் எப்போதுமே எனக்கு இல்லை.. ஆனால் இலங்கையில் அதுவும் தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சமகால நிகழ்வை பகிர்ந்து கொள்ளாமல் விட்டால் அது நல்லதல்ல என்றே நினைக்கிறேன்..

அதுவும் இந்த சம்பவம் இலங்கை முழுவதும் ஒரு அதிரவலையை ஏற்படுத்தி விட்டது.
முதலில் இந்த சம்பவம் பற்றி அறிந்திராத அன்பர்களுக்கு ஒரு அறிமுகம் தந்து விடுகிறேன்.

இந்த சுட்டியையும் பாருங்கள். 
*********

கொழும்பு.
இலங்கையின் வர்த்தகத் தலைநகர்...
வெள்ளவத்தை... கொழும்பின் ஒரு சிறு பகுதி. தமிழர்கள் அதிகமாக செறிந்து வாழும் ஒரு பகுதி...
தொடர் மாடிக் கட்டிடப் பகுதி ஒன்றின் குறிப்பிட்ட ஒரு வீட்டிலிருந்து பிணவாடை கிளம்புகிறது.. சந்தேகமுற்ற அயலவர்கள் போலிசுக்கு அறிவிக்கின்றனர்..

அந்த இடத்துக்கு விரையும் போலீசார் அதிர்ச்சி அடைகின்றனர். தந்தை, தாய், ஒரு இளம் மகள் ஆகியோர் உயிரற்றுக் கிடக்கின்றனர். மகனைக் காணவில்லை. கடத்தப் பட்டிருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்..

பிரஷான் .
அவன் ஒரு மெடிக்கல் ரெப் .... மிக சாந்தமான நல்ல ஒரு பையனாக அறியப் படுகிறான். அவன் மேல் சந்தேகம் கொண்டாலும் அது ஒருபுறம் இருக்க விசாரணை கட்டவிழ்த்து விடப் படுகிறது.  மத்திய மலைநாட்டில் உள்ள அவனது சொந்த ஊரில் விசாரிக்கப் படுகிறது. திருப்பமாக கொலை நடந்த அன்று அவன் ஊருக்கு வந்ததாக அயலவர்கள் கூறுகின்றனர்.

சில நாட்கள் கழித்து அவனது உறவினர் ஒருவருக்கு மின்மடல் ஒன்று வருகிறது. அதில் பிரசான் தான் தனது பெற்றோரையும் தங்கையையும் கடன்  தொல்லையால்  கொன்று விட்டதாகவும் அவர்கள் உயிரோடு இருந்தால் இன்னும் வேதனை அடைந்து இருப்பார்கள் என்றும் கூறி   உள்ளான்.

விசாரணை மீண்டும் திசை திரும்புகிறது. தான் கெட்டவன்  அல்ல எனவும் தானும் இன்னும் சில நாட்களில் உருக்குலைந்த சடலமாக மீட்கப் படுவேன் எனவும் அவன் மின்மடல் அனுப்பி உள்ளான்.
*******


ஒரு வார இடைவெளியில் தனது உருவத்தை மாற்றிக் கொண்டு வேறு ஒரு பகுதிக்கு தப்பிக்க பேருந்தில் செல்லும் பொது அவனது பழைய ரூம் மேட் ஒருவனால் இனங்காணப் பட்டு கையும் களவுமாக பிடிக்கப் பட்டான்.

போலிஸ் விசாரணையில் பிரசான் எந்த சிரமமும் வைக்கவில்லை. அவனது வாக்கு மூலமாகவே வெளிவந்த விபரங்களை பாருங்கள்.

பிரசான் மலையகத்தில் பத்தனைக்கு அண்மித்த ராணியப்பு எனும் தோட்டத்தில் வசித்தவன். தந்தை தோட்ட வாகன சாரதி. கொழும்பில் நல்ல வேலையில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளான். சொந்தமாக கார் கூட வாங்கி உள்ளான்..

ஆடம்பர செலவுகள் அதிகரிக்க கடனும் அதிகரித்து உள்ளது. மொத்தக் கடன் 80 லட்சம் . ( நம்ப முடிகிறதா? அதுவும் 25 வயதில்) ஒரே நபரிடம் இருந்து 42 லட்சம் பெற்று உள்ளான்.

கடனை அடைக்க தந்தையின் ஓய்வூதியப் பணத்தைக் கேட்டு உள்ளான். ( மிகச் சிறு தொகை, அவனது கடனுடன் ஒப்பிடும் பொது.) தந்தை மறுக்க , ஆத்திரம் அடைந்துள்ளான்.

பின்பு எதோ முடிவெடுத்தவன் மறு நாள், அவர்களின் பானம் ஒன்றில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொன்று விட்டான். பின்பு தனது வீட்டுக்கு சென்று பணம் தேடி உள்ளான். கிடைக்காத ஆத்திரத்தோடு திரும்பி வந்துள்ளான்.

தனது தாயின் கழுத்து சங்கிலியை அடகு வைத்து 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்கி விட்டு மறுநாள் தனது காதலியுடன் சுற்றி விட்டு அவளுக்கு 17000 ருபாய் கையடக்க தொலைபேசி ஒன்றை பரிசளித்து விட்டு திரும்பி பின்பு தலை மறைவாகி விட்டான்.

இப்படியே நீளுகிறது வாக்குமூலம்..( பத்திரிகைகளில் பந்திக் கணக்கில் எழுதிய விடயம். ஆனால் அந்த அளவு எழுத எனக்கு பிடிக்கவில்லை. )
*********
இனி நான் சொல்ல வந்ததை சொல்கிறேன்.
முழு நாட்டிலும் இது மிகப் பெரிய சலசலப்பை உண்டாக்கி விட்டது உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால் அவன் ஒரு காட்டு மிராண்டி... கொலைகாரன்... என அடக்கிக் கொண்டே போக முடியும் அந்த வேலையே இன்று வரை பலர் பார்ப்பதால் நமக்கு அந்த வேலை வேண்டாம். நான் அதன் விளைவுகளை மட்டும் சொல்கிறேன்.

ஒரு பக்கம் இந்த விஷயத்தை பத்திரிக்கைகள் நன்கு பயன்படுத்திக் கொண்டன ஒவ்வொரு நாளும் விசாரணை வாக்கு மூலம் என விதமாக எழுத நல்ல கதை கிடைத்து விட்டது.

மறுபுறம் மக்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை உண்டுபண்ணி விட்டது. ஏனெனில்  பணத்துக்காக அவன் கடத்தப் பட்டு வேறு யாரும் கொலை செய்து இருந்தால். அந்த மூன்று உறவுகளை எமது உறவுகளாக எண்ணி கண்ணீர் வடிப்பதோடு அந்த சம்பவம் கரைந்து போயிருக்கும்... ஆனால் மகன் ஒருவன் தனது பெற்றோரை?

இது வரை செய்திகள் மூலமாக கேள்விப்பட்ட விடயத்தை எமது சமூகம் நேரடியாக சந்தித்த பொது ஆடித்தான் போனது.
வெறுமனே மேலோட்டமாக பார்க்காமல் அதன் பின்னணியில் எழும் கேள்விகளை கேட்கிறேன், பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.....

ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் பட்டான்,.. அவன் ஊதாரியாக இருக்கட்டும். ஆனால் தன கடன் சுமைக்கு அவன் தற்கொலை செய்து கொள்ள மனநிலை தூண்டி இருக்கக் கூடும்... ஆனால் அவன் தனது பெற்றோரைக் கொலை செய்து அதுவும் அவர்களின் நன்மைக்கே என எந்த யோசனையில் சொல்லி இருக்கக் கூடும்.? அது பொய்யா? அல்லது அதன் பின்னணியில் எதுவும் உண்டா?

மின்மடல் மூலம் தான் தற்கொலை செய்து கொள்வதாக திசை திருப்ப முயன்றுள்ளான் . ( ஏனெனில் அவன் அளித்த சில விபரங்கள் பொய்.) என தைரியத்தில் அவன் அவ்வாறு தப்பித்து விட முடியும் என நம்பி இருப்பான்? அல்லது உண்மையில் மன நிலை பிரல்ந்தவனாக இருக்கக் கூடுமா?

ஒரே நபர்  என்ன நம்பிக்கையில் ஒருவனுக்கு 42 லட்சம் கடன் கொடுக்க முடியும்? என்ன உத்தரவாதத்தில் அவ்வாறு கொடுக்க முடியும்? அதன் பின்னணி ஏன் வெளிவரவில்லை....?

தனது தங்கை குடித்த பானம் வாந்தி எடுத்து விட , அவளுக்கு பலவந்தமாக புகட்டி உள்ளான். என்ன குரூர மனதுடன் அதை செய்திருப்பான்?

உங்களால் முடிவெடுக்க முடிகிறதா? அவன் கொடூரக் கொலைகாரனா, மன நோயாளியா அல்லது சூழ்நிலைக் கைதியா? 

தான்   கெட்டவன் அல்ல என மின்மடலில் எழுதி இருக்கிறான்...

இந்த விடயத்தை எழுதி விட வேண்டும் என என்னைத் தூண்டிய ஒரு விடயத்தை சொல்லி விடுகிறேன்....
" நம்ம ஆக்கள் தோட்டத்தை விட்டு வெளிய போய் காசு பாத்துட்டா அவ்வளவுதான்... இதான் பண்றான்.." இது ஒரு அனுபவஸ்தர் சொன்னது.. மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரிந்தாலும் அதன் விளைவு பாரதூரமானது.

மலையகத்தில் இருந்து வெளியே உழைக்க செல்லும் இளைஞர்கள் சும்மா செல்லவில்லை... கடும் உழைப்புக்கு போதிய வருமானம் இல்லாமல் சமீப காலமாகத்தான் வெளியே சென்ற உழைக்கிறார்கள்..

இந்த திமிர்ப் பிடித்த ஊதாரிக்காக ( மன்னிக்கவும்... என்னையும் மீறி வரும் தார்மீகக் கோபம் இது) அந்த இளைஞர்களின் உழைப்பை கொச்சைப் படுத்த முடியுமா?

தனது தேவைக்காக இந்த அளவு சுயநலமாக செயல்பட்ட இளைஞனை உருவாக்கிய சமூகம் மீது ( நான் உட்பட) தவறு இல்லையா? எங்கள் கலாசாரம், ஒழுக்க நெறி எங்கே செல்கிறது?
விடை தெரியாத கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். விடை தெரிந்தால் சொல்லுங்கள்...

 குறிப்பு:
தெளிவாக எழுத விடாமல் மனம் தடுக்கிற படியால் சுருக்கமாக வினா வடிவில் பலவற்றை முன்வைத்துள்ளேன்.... ஆனால் விளக்கம் கிடைக்கவில்லை என்று நினைத்தால் மறுமொழியில் சொல்லுங்கள்... தாரளமாக விரிவாக விவாதிப்போம்.




Wednesday, September 5, 2012

தி பியானிஸ்ட் திரைப்படம்- ஒரு கண்ணோட்டம்


தி பியானிஸ்ட் திரைப்படம் பார்த்து விட்டீர்களா? பார்க்காவிட்டால் நிச்சயம் பார்க்கச் சொல்லி பரிந்துரை செய்வேன். உலக சினிமா பற்றிய எனது புரிதலை மாற்றி என்னை ஓரளவு தேர்ந்த ரசிகனாக மாற்றிய திரைப்படம். நான் முதன்முதலாக இரண்டாவது முறை உபதலைப்புகளை தேடி ரசித்த திரைப்படம். 
பெரும்பாலான நண்பர்கள் பார்த்திருப்பீர்கள்.. 

எனினும் பார்க்காத தோழர்களுக்கு ஒரு அறிமுகமாகவும் பார்த்தவர்களுக்கு ஒரு சுகமான மீட்பாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் பகிர்ந்து கொள்கிறேன்..

உலக சினிமாவை ருசிக்க நினைக்கும் கற்றுக் குட்டி யாருக்குமே பொதுவாக பரிந்துரைக்கப்படும் முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று இது... ( நானும் கற்றுக் குட்டி என்ற முறையில் பல்வேறு நல்ல விமர்சனங்கள் மூலமாகவே இந்த திரைப்படம் நோக்கி உந்தப் பட்டேன். )

இந்த திரைப் படம் உண்மை சம்பவம் ஒன்றை மையப் படுத்தி எடுக்கப் பட்ட பீரியட் பிலிம்.. பொதுவாகவே உலக சினிமாவில் வரலாற்றுக் கதைகள் நன்றாக இருக்கும். அதிலும் இது முதல் தரம். 
"இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப் பட்ட போலந்து யூத பியானிஸ்ட் ஒருவனின் கதை...ஒரு நகரத்தின் சாவு " என்ற தலைப்பில் அந்த யூதரால் எழுதப் பட்ட சுய சரிதையை மயமாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப் பட்டது. 

திரைக்கதை 
1939.
இரண்டாம் உலக யுத்தம் .
ஜெர்மானியப் படைகள் வெற்றிக்கனியை ருசித்துக் கொண்டிருக்கின்றன. அமைதியாக ஒதுங்கி நிற்கும் போலந்து மீதும் தாக்குதல் நடத்தப் படுகிறது. அந்த நாட்டின் ரேடியோ கட்டுப்பாட்டகம் குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது. அதில் பியானிஸ்ட்ஆக தொழில் புரியும் ஒருவன்தான் ஸ்பில்மான். ( Szpilman ) 


யூதர்கள் தங்கள் உடைமைகளை  விட்டுவிட்டு வெளியேறுவதற்கு சிறு அவகாசம் கிடைக்கிறது. தங்களால் முடிந்த அளவு பொருட்களை எடுத்துக் கொண்டு குடும்பம் வெளியேறுகிறது. யூதர்களின் மரணக் கிடங்கு ஒன்றுக்கு பலியிடப் படவே அவர்கள் அழைத்து செல்லப் படுகிறார்கள். பயணத்தின் வழியில் இந்த இசைக் கலைஞன் யூதன் அல்லாத   நண்பன்  ஒருவனால் காப்பாற்றப் படுகிறான். 

உறவுகள் அனைத்தும் அறுந்து விட்ட நிலையில் சபிக்கப் பட்ட வாழ்வை அடைகிறான். அடிமைத் தொழிலாளியாக ஒரு இடத்தில் வேலை செய்கிறான். அதே நேரத்தில் யூதப் புரட்சிக் குழு ஒன்று உருவாவதை அறிந்து சில ஆயுத கடத்தலிலும் உதவுகிறான். அதுவும் தோல்வி அடைகிறது. 

மீண்டும் ஒரு முறையும் யமனின் கருணை அவனுக்கு கிடைக்காமலே போகிறது. அவனின் பழைய தோழி, அவளது கணவன் மூலமாக யூதரல்லாத மக்கள் வாழும் பகுதிக்கு அழைத்து செல்லப் பட்டு தலைமறைவாக தங்க வைக்கப் படுகிறான்.


பயங்கரமான தனிமையில் வாடும் அவனுக்கு தனக்குள் ஒளிந்திருக்கும் கலைஞனின் வேதனை புரிகிறது. அவனது விரல்கள் துடிக்கின்றன. போதாக் குறைக்கு ஜான்டிஸ் வந்து விடுகிறது. 

வெகுவிரைவில் அந்த பகுதியும் யுத்தத்தால் அழிகிறது. சிதைவுகளுக்கு நடுவே உணவை தேடி ஓடுகிறான், பதுங்குகிறான். 
ஒரு முறை உணவைப் பிரித்தவாறு நிமிர்ந்தவன் நடுங்கிப் போகிறான். ஒரு ஜெர்மன் அதிகாரி நிற்கிறான். " நீ யார்?' என விசாரிக்கிறான். 
" நான் ஒரு பியானோ கலைஞன்" 

அந்த அதிகாரி அவனை நம்பாமல் ஒரு பியானோ அருகே அழைத்து செல்கிறான் . அதன் முன்னால் அமரும் அவன் தன்னை மறக்கிறான். நடுங்கிய அவன் கைகளுக்கு தீனி கிடைக்கிறது... தன்னை மறந்து வாசிக்கிறான். அந்த அதிகாரியையும் மெய்மறக்க வைக்கிறான். மாலையில் மீண்டும் வரும் அதிகாரி ப்ரெடும் , ஜாமும் தருகிறான். சில நாட்களுக்கு இது தொடர்கிறது. 

ஒரு நாள் மீண்டும் வரும் அதிகாரி தான் மாற்றலாகி செல்வதாக சொல்கிறான். 
" யுத்தம் முடிந்ததும் நீ என்ன செய்வாய்?" 
" எங்கள் நாட்டு ரேடியோவில் வாசிப்பேன்" 
" நான் அதைக் கேட்பேன்."
அந்த வாக்குறுதியையும் குளிருக்கு பாதுகாப்பாக தனது இராணுவ மேலங்கியையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறான். 

1945.
காட்சி மாறுகிறது. 
ஜெர்மன் போரில் தோற்கிறது. மீட்புப் படைகள் இவன் தங்கி இருக்கும் கட்டடங்களை அழிக்கிறது . ஜெர்மானிய மேலங்கியோடு இவன் வெளியே வருவதால் துப்பாக்கிகள் இவனை நோக்கி திரும்புகிறது. சிலையாகி நிற்கிறான். 
************************************************

விருதுகள் 
இத்திரைப்படம் 3 அகாடமி விருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகர்: பியானிஸ்ட் - அட்ரியன் ப்ரோடி 
சிறந்த இயக்குனர்: ரோமன் போலன்ஸ்கி 
சிறந்த தருவிக்கப் பட்ட திரைக்கதை.. : ரோனலடு ஹாவார்ட் 

இது தவிர கேன்ஸ், பப்டா , கெய்சர் விருதுகளையும் அள்ளிக் குவித்தது. 

வசூல்.
35 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப் பட்ட இத்திரைப்படம் 120 மில்லியன் டாலர்களை குவித்தது. 

விமர்சனங்கள் 
விமர்சன ரீதியில் இத்திரைப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக ப்ரோட்யின் நடிப்பு... இசையும், இயக்கமும் பற்றி நல்ல கருத்துகள் வழங்கப் பட்டன.
இவர்தான் உண்மையான ஸ்பில்மான்
தனது சுய சரிதையில் அந்த அதிகாரி பற்றி நன்றியோடு கூறுகிறார்.... 
கவனிக்கத் தக்கவை...
படம் முழுவதும் வருவது ப்ரோடி..  ஒரு போதும் சலித்துப் போகவில்லை...  கண்களின் பின்னணியில் எப்போதும் நீர் நிறைந்திருக்க இவரின் நடிப்பு மிக அருமை. இன்னும் பல படங்களில் இவர் முத்திரை பதித்து உள்ளார். 

அதிகாரி தரும் ஜாமை கை நிறைய அள்ளி விரலை சூப்பி விட்டு கண்ணை மூடும்போது நமக்குள்ளும் அந்த அகோரப் பசியை உணர்த்தி விடுகிறார். எந்த இடத்திலும் மிகை நடிப்பை காட்டவில்லை. 
குடும்பத்தையே இழந்து நிக்கும் சோகம், கண்முன்னே இறந்து போகும் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போகும் அவலம், நன்றியுணர்வு... எல்லாம். 
உண்மையான பியானோ கலைஞனை போலவே அசத்தி விட்டார்... அவரது நடிப்பில் பல  இடங்களை குறிப்பிட்டு சொல்லத் தோன்றுகிறது. ஆனால் பதிவின் நீளத்துக்கு அது வேண்டாம்.

இரண்டாவது இயக்குனர்..
தனது உணர்வை அப்படியே வெளிப்படுத்தும் நடிகர்கள் கிடைத்து விட்டதால் அசத்தி விட்டார்.  காட்சியமைப்புகள் பாத்திரப் படைப்புகள் அனைத்தும் மிக நேர்த்தியாக இருந்தது .எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளவில்லை... ஸ்பில்மான் கதாநாயகனோ அல்லது விடுதலை வீரனோ அல்ல... அவன் ஒரு அதிருஷ்டசாலி அவ்வளவே. 

படம் மனித நேயத்தை வலியுறுத்துகிறது. கொடூரங்களுக்கு நடுவே சில நல்ல உள்ளங்கள்.... நட்புக்காக தனது நண்பனைக் காப்பாற்றும் ஒரு போலிஸ்... அவனை தலை மறைவாக பாதுகாக்கும் அவனது இசையை நேசிக்கும் தோழி... இசைக்காக எதிரிக்கு உதவும் ஒரு இராணுவ அதிகாரி. 

ஜெர்மன் அதிகாரி அவனை விளிக்கும் பொது " ஏய்... யூதா.." என்றே அழைக்கிறான். சிறிதளவே வந்தாலும் அக்கதாப்பாத்திரம்  நிறைந்து விடுகிறது..  
இறுதியாக அந்த அதிகாரி யுத்தக் கைதியாக ஒரு முகாமில் கிடக்கிறான். அவர்களை நோக்கி  செய்யப் படுகின்றன... 
அவர்களில் ஒருவனிடம் தான் ஒரு  யூதனுக்கு உதவியதாக சொல்கிறான்.. 

சொல்லியே ஆக வேண்டிய இன்னொரு விஷயம் இசை... 
இசைக் கலைஞன் பற்றிய படம் என்பதால் படம் முழுக்க நிறைந்து மனதை வருடுகிறது.
பல புகழ் பெற்ற கலைஞர்களின் இசை பயன்படுத்தப் பட்டது. 

அந்த உடைந்த சிதைவுகளுக்கு மத்தியில் அவன் மனதில் ஒலிக்கும் இசை மாமேதை பீத்தோவன் உடையது...

ஆகா மொத்தத்தில் நல்ல நடிப்பு, இயக்கம், திரைக்கதை, இசை...
இந்த நான்கிற்காக ஒரு முறை கட்டாயம் பார்த்து விடுங்களேன்.....

கொசுறு 
அந்த ஜெர்மன் அதிகாரி  ஹோசன்பெல்ட்.
1952 இல் ஒரு கைதியாக இறந்து போனார்...
உண்மையில் அந்த அதிகரி ஒரு பியானிஸ்ட்... இது பின்னாளில் தெரிய வந்தது. இசை எப்படி மனிதனை மாற்றி இருக்கிறது பார்த்தீர்களா ? 

பியாநிச்டின் கைகள் வாசிப்பது ப்ரோடி அல்ல... அந்த க்ளோஸ் அப் ஒரு உண்மையான போலந்து பியானிஸ்ட் உடையது.  உண்மைத் தன்மைக்காக இயக்குனர் எவ்வளவு உழைத்து இருக்கிறார் பார்த்தீர்களா? 

நாம் அனைவருமே வரலாறு கற்றுக் கொடுப்பதை மறந்து விடுகிறோம். அவ்வளவு அடிபட்ட யூத இனம் இன்று இன்னொரு இனத்தினரை வதைக்கின்றனர் அல்லவா ?அங்குதான் மனது உறுத்துகிறது. 

நன்றி.....


தி பியானிஸ்ட் திரைப்படம்-  ஒரு கண்ணோட்டம் 

........................
........................
........................
அருண்பிரசாத் வரிக்குதிரை   Rating: 4.5/5



Friday, August 31, 2012

மலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....

பதிவின் முன்னைய அத்தியாயங்களுக்கு இங்கு செல்க...
கடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் 
சாதி அடிப்படையில் இழுத்து வரப்பட்ட தமிழர்கள்
மண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3

மிஞ்சி இருந்த தமிழர்கள் என நான் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டது மிகைப் படுத்தப் பட்ட ஒன்று அல்ல.. 
மன்னாரில் இருந்து மாத்தளை நோக்கி சென்ற அவர்களுக்கு தகுந்த வசதிகள் எவையுமே அளிக்கப் படவில்லை. சுகாதார வசதிகளும், இயற்கைக் கடன்களை தகுந்த விதத்தில் பூர்த்தி செய்யும் வசதிகளும் அறவே இல்லை. இலங்கையின் வெப்ப வலயத்தின் எத்தனையோ தடைகளை அவர்களால் தாண்டி வந்திருக்க முடியும். ஆனால் ஒன்றை மட்டும் அவர்களால் தாண்டி வர முடியவில்லை. 
அது : மலேரியா... 

பிழைப்புக்காக வந்த மக்களை அந்த ஆட்கொல்லி நோய் ஆட்கொள்ளத் தொடங்கியது. அவர்கள் என்ன சொந்தமா அல்லது  பந்தமா, ஆங்கிலேயர்களுக்கு?  கூலிக்கு வந்தவர்கள்தானே? 
ஆரம்ப நிலையில் அழைத்து வரப் பட்ட தமிழர்களில் நாற்பது சதவீத மக்கள் மட்டுமே மாத்தளைக்கு முழுதாய் வந்து சேர்ந்ததாக புள்ளிவிபரம் சொல்கிறது. ஆட்கொல்லி நோய்க்கு விருந்தாக  மக்கள் மடிந்து விழுந்தனர்...  மீதம் இருந்தவர்கள் தங்களுடைய உறவுகளின் இழப்பை மனதுக்குள் தேக்கி விட்டு தோட்டங்களுக்கு புறப் படுகிறார்கள். 

மாத்தளை அவர்களின் தரிப்பிடம் மட்டும்தான். அவர்கள் மத்திய மலைநாட்டின் பகுதிகள் முழுவதற்கும் பிரித்து அனுப்பப் படுவார்கள். அங்கு அடர்ந்து கிடக்கும் காடுகளை அழித்து கோப்பி பயிரிட வேண்டும். அது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலை கிடையாது. 
ஆங்கிலேயர்க்கு முன்பு இலங்கையை கைப்பற்றிய போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர் ( டச்சுக்காரர்) இருவருக்குமே மத்திய மலை நாட்டை  கைப்பற்ற முடியவில்லை. இலங்கையின் மன்னன் அப்போதெல்லாம் கண்டியில் ( மலைநாட்டின் தலைநகரம்) ஒளிந்து கொள்வான். அது சிங்களவர்க்கு பாதுகாப்பாக இருக்க மிகப் பெரிய அரண் இந்த மலைகள் மற்றும் காடுகள்தான். 

சிங்களவர்களுக்கு இடையில் உள்ள சாதி அமைப்பில் முக்கியமான பிரிவு இந்த உயர்நாட்டு ( கண்டி) சிங்களவர் , தாழ்நாட்டு சிங்களவர் என்பதுதான். கண்டி சிங்களவர்கள் தங்களை உயர் சாதியினரை பெருமையடிக்கக்  காரணம் தாங்கள் கடைசி வரை சுதந்திரமாக இருந்த வீரர்கள் என்பதுதான். 

ஆனால் அதற்க்கு முக்கியமாக காரணம் மலையகத்தில் காணப் பட்ட இந்த கடுமையான தடைகள். ( இறுதியாக இலங்கையை ஆண்ட மன்னன் கண்ணுசாமி என்ற தமிழன். அவனால்தான் நாங்கள் நாட்டை ஆங்கிலேயரிடம்  இழந்தோம் என இனவாதம் பேசுபவர்கள் இன்றும் உள்ளார்கள். " கண்டி ராச்சியத்தில் இறுதி மன்னன் மக்களிடயே செல்வாக்கு இழக்க முக்கிய காரணம் அவன் சிங்களவன் இல்லை என்பதுதான் " என வரலாறு பாடப் புத்தகங்களில் எவ்வித தயக்கமும் இல்லாமல் போதிக்கப் படுகிறது) 

இத்தகைய கடுமையான இடர்களைக் கடந்து அந்த மலைகளில் பயிர் செய்யத் தொடங்கினார்கள்.
இந்த வரலாறுகளை தெளிவாக எடுத்து சொல்ல மலையக மக்களிடம் முறையான ஆவணம் இல்லை என்பதே உண்மை. ஆதாரம் அற்றவை என்பதோ அவர்கள் விரும்பவில்லை என்பதோ இல்லை. அதற்கான துளி வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை என்பதே அதற்கான காரணம். புத்தக இலக்கியங்களை எழுதி வைப்பதற்கான கல்வியறிவோ, பணவசதியோ அவர்களுக்குக் கிட்டவில்லை. 
எனவேதான் ஈழத்து இலக்கியத்தில் மலையக இலக்கியம் மிகவும் பிற்பட்ட காலத்திலேயே ஆரம்பமாகிறது. 

மலையக இலக்கியம் என்று தேடத் தொடங்கினால் அவர்களின் சமூகம் சார்ந்த படைப்புகளின் தொடக்கம் 1950 களைத் தாண்டித் தேடப் படவேண்டியுள்ளது. பெரும்பாலான படைப்புகள் அவர்களின் வஞ்சிக்கப் பட்ட வரலாறு தொடர்பானது. சில பெருந்தோட்ட மக்களின் கதாநாயகர்களின் வரலாறு தொடர்பானது. 

( என் கைவசம் ஏராளமான நூல்கள் உள்ளன. அவற்றை எனது வாசகர்களுக்கு சுட்டிகள் மூலமாக தர விரும்புகிறேன். அதற்க்குப் போதுமான வரவேற்பு கிடைக்குமா தெரியவில்லை. ஆனால் தனியுரிமை விடயங்கள், ஆக்கிகளின் சம்மதம் என்பவற்றை சரிசெய்து விட்டு அதனை செய்யவுள்ளேன். அதிஷ்டவசமாக பல மூத்த மலையக இலக்கியவாதிகளை நேரடியாக நான் அறிந்து வைத்துள்ளேன். )

அந்த இலக்கியங்களின் சுவை எழுத்து நடை சார்ந்து இராது. மாறாக அவர்களின் துன்பியல் வாழ்வை  சார்ந்து இருக்கும். 
வரலாறு என்று நோக்கும் போது ஆங்கிலேயரின் பதிவுகள் சில உள்ளன. ஆனால் அவை மக்கள் வாழ்வைப் பிரதிபளிப்பதில்லை . ஆனால் வாய்மொழி இலக்கியம் மட்டுமே அதற்கு சான்று. நாங்கள் தமிழ் இலக்கியம் படித்த போது வாய்மொழி இலக்கியங்களில் மலையக நாட்டார் பாடல்களுக்கு தனியிடம் வழங்கப் பட்டது. 

நாட்டார்பாடல்கள் கவித்திறன் மிக்கவர்களால் இயற்றப் பட்டவை அல்ல. மாறாக உழைக்கும் மக்களால் களைப்பு தெரியாமல் இருக்கப் பல்வேறு காலங்களில் பல்வேறு மக்களால் மாற்றங்களுடன் பாடப் பட்டவை. அவற்றில் பல ஏட்டு வடிவம் பெறாமல் அழிந்துபட்டுப் போயிருக்கக் கூடும். கரடு முரடான மலையகம் தமிழர் வருகையின் போது எப்படி இருந்தது என்பதற்கு இந்தப் பாடலின் ஆரம்பத்தைப் பாருங்கள்.

" அன்று இந்த மலைநாடு 
எங்கும் அது பெருங்காடு.....
ஆதவனின் நிழல் கூட
பூமிதனில் படராது............"

கோப்பி பயிர்ச் செய்கைக்கு பின்னர் மக்களுக்கு அந்த குடில்கள் தரப்பட்டன. இலங்கையின் மற்ற பகுதிகளை விட மலைநாட்டில் குளிர் அதிகம். அதற்கு மத்தியிலும் அதிகாலையில் வேலைகளுக்கு விரட்டப் பட்டார்கள். மலைகளில் நின்று கொண்டு வேலை செய்யவேண்டு. பொழுது சாயும்வரை. 
( இன்றும் அந்த நிலை மாறிவிடவில்லை... நான் பாடசாலை போகும் காலத்தில் அந்த காலை நேரத்தில் மழையோ, வெயிலோ மலைகளில் கொழுந்து பறிக்கும் பெண்களை கடந்துதான் பஸ்ஸில் சென்றுள்ளேன்) 

" கோண கோண மலையேறி 
கோப்பிப் பழம் பறிக்கையிலே     
ஒரு பழம் தப்பிச்சுன்னு 
உதைச்சானைய்யா  சின்னத் துரை...."

துரை எனப் பட்டவர்கள் ஆங்கிலேய மேலதிகாரிகள்...

A tea factory



இவ்வாறான நாட்டார் பாடல்கள் மட்டும்தான் மலையக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் இலக்கியங்களாக அமைந்தன. மாறாக எழுத்துருவில் தங்களுடைய கருத்துகளை வெளிப் படுத்த மிக நீண்ட காலம் எடுத்தது. 

மலையக மக்களின் வாழ்வை காட்டும் நாவல்கள், கட்டுரைகள் என்பன ஆங்கிலேய ஆட்சி காலத்தின் மிகப் பிற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்றன. நடேச அய்யர் முதலியவர்கள் இதற்கு முன்னோடிகள். 
அந்தனி ஜீவா, சாரல்நாடன், கணேசன் முதலியவர்கள் காத்திரமான படைப்புகளைத் தர அவர்கள் சுதந்திரத்துக்குப் பின்னும் மிக நெடும் காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. 

இந்திய வம்சாவளி தமிழர்களின் குரல், வரலாறு அல்லது பிரச்சினைகள் நிச்சயமாக சர்வதேச அளவில் முன்னெடுக்கப் படவில்லை. தமிழர்களின் உரிமைப் போராட்டம் எடுத்து சொல்லப் பட்ட அளவு கூட இந்த தமிழர்களின் வாழ்வியல் போராட்டம் எடுத்து சொல்லப் படவில்லை. இலக்கியங்கள், கல்வித்துறை என்பவற்றில் அவர்களின் பங்களிப்பு முன்னெடுக்கப் பட மிகநீண்ட காலம் எடுக்கக் காரணங்கள் என்ன? 

முதற்காரணி    வறுமை. 
தோட்டப் புற மக்களின் வாழ்வாதார சுமைகள் அதிகமானவை. குடியேற்றப் பட்டவர்களால் பூர்வீக சொத்துகளைக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே அவர்களின் பொதுபடையான தேவைகளுக்கு முன் வேறு விடயங்களை யோசித்துப் பார்க்கவில்லை. இலக்கியத்துக்கோ, கல்விக்கோ மூலதனம் எதுவும் இருக்கவில்லை. எனவேதான் மலையக  மக்களின் பிரச்சனைகள் இன்றளவும் ஒரு நிறுவனப் படுத்தப் பட்ட முறையில் வெளியே சொல்லப் படுவதோ புரிந்து கொள்ளப் படுவதோ இல்லை. அவர்களின் உண்மையான வரலாறும் பெரும்பாலும் மறக்கப் பட்ட நிலையிலேயே உள்ளது. 

கல்விநிலையோ நல்ல நிலையில் இருக்கவில்லை. கல்வி உரிமைகளும் முறையாக வழங்கப் படவில்லை. 
" உங்கள் மூலம் நாட்டுக்கு வருமானம் கிடைக்கிறது, அந்த ஒரே காரணத்துக்காகத்  தான் நீங்கள் வாழ முடிகிறது. நீங்கள் தோட்டத்திலிருந்து வெளியேறி உங்கள் பிள்ளைகள் படிக்கப் போய்விட்டால் அப்புறம் உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது" என்று வக்கிரமாக தலைமைகள் சிலராலேயே அறிவுறுத்தப் பட்டனர். 

ஒரு சில உதாரணங்களை சொல்லிவிட்டு முடிக்கிறேன். 

ஆங்கிலேயர்களால் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு விடயம் கோதுமை. மலைகளில் 12 மணிநேர கடும் உழைப்புக்கு கோதுமையின் உட்பொருட்கள் கொஞ்சம் உதவியாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. 
இலங்கையின் பிரதான உணவு அரிசி என பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்தாலும் மலையகத்தில் அது கோதுமைக்குப் பின்தான். 
உலக சந்தையில் கூடுகிறதோ இல்லையோ ஒவ்வொரு அரசாங்கமும் தேவைப் படும் போதெல்லாம் அதன் விலையை மலையளவு உயர்த்தி தன் தாகத்தை தீர்த்து அந்த சுமையை மலையக மக்களின் தலையில் போடும்.
இதனால் சிங்களவரின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டியதில்லை  . 

மலைநாட்டின் அதிகாரிகள் பெரும்பாலும் சிங்களவர்களாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளப் படுவர். அவர்கள் தாங்கள் தமிழ் கற்க வேண்டுமென ஒருபோதும் யோசிப்பதில்லை. தமிழ் மட்டுமே தெரிந்த தோட்டத் தொழிலாளிகள் தாங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கடும் கஷ்டப் பட வேண்டியிருக்கும். அல்லது அந்த அதிகாரிகளின் அடிவருடிகளுக்கு கொஞ்சம் படியளக்க வேண்டும். 

கல்விச் சுற்று நிருபங்கள், முக்கியமான கிராம சேவைப் படிமங்கள் என்பன தமிழில் இருக்காது. வாக்காளர் பதிவு தொடக்கம் அத்தனை பதிவுகளுக்கும் அதனை நிரப்பவே பத்து இடங்கள் அலையை வேண்டி இருக்கும். 
பஸ் வண்டிகளின் பெயர் பலகையை வாசிக்கத் தெரியாமல் 
" தம்பி , எந்த பஸ்சுல மஸ்கெலியா போகணும் தம்பி.... " என்று பரிதாபமாக கெஞ்சும் வயசான அய்யா மார், பெண்களைப் பார்த்து எத்தனையோ முறை மனம் வெதும்பியதுண்டு. 


இதுவும் உதாரணங்கள்தான். இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. 
1800 களிலேயே மலைகளைத் தகர்த்து விட்டு பயிரிடத் தொடங்கி விட்டனர் , தமிழர்....
அவர்களின் பாரம்பரிய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை என்ன செய்தனர்? 

இன்னும் வருவேன். 

பயணம் ஒன்று குறுக்கிட்டதன் காரணமாக இந்தப் பதிவில் தாமதம் ஏற்பட்டு விட்டது. மன்னிக்க வேண்டும் தோழர்களே......



   

Monday, August 20, 2012

அரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....


இணைய உலகத்தில் டிராபிக் என்பது ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நம்முடைய வலைத் தளத்தின் நிலை, எமக்குக் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, நமக்கு கிடைக்கும் விளம்பரங்கள் முதலிய அனைத்தும் டிராபிக் சார்ந்தே அமைகின்றன. எமது தளத்துக்கு கிடைக்கும் வருகைகளை பல விதங்களில் அதிகரிக்கலாம். அந்த வழிகள் நேர்வழிகளாகவும் இருக்கலாம். அல்லது  குறுக்கு வழிகளாகவும்  இருக்கலாம்.

நான் எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்பதை அனேக அன்பர்கள் புரிந்து கொண்டிருபீர்கள். ஆம். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைத்து அதனைக் கொண்டு ஹிட்சுகளை அதிகரித்துக் கொள்வதைப் பற்றிதான் கூற நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு பதிவுலக அன்பர் இதைக் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் என்னளவில் அப்படிக் கடுமையாக விமர்சனம் செய்ய முடியவில்லை. அதற்கான காரணத்தையும் நிச்சயம் சொல்கிறேன். 

அறிமுக இசையமைப்பாளர் அனிருத் பற்றிய செய்தி புகைப்படங்களாக இணையத்தில் வலம்வருவதை யாவரும் அறிவீர்கள். இப்போதைய நிலைமையில் இதைப் பற்றிப் பேசினால் பரபரப்பு பதிவாக மாறும் என்று நினைத்து நான் இந்தப் பதிவை இடுவதாக நினைக்க வேண்டாம். இந்தப் பதிவில் இது ஒரு செய்தி மட்டுமே; நான் ஆராயப் போவது ஒரு பரந்து பட்ட நோக்கில்.  இது பற்றிக் கருத்துகளை இது வரை எனது பதிவில் நான் வெளியிட்டதில்லை. தற்போதைய நிலைமையில் இந்த நிகழ்வு இதை பற்றிப் பேசஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அவ்வளவுதான். 

முதலாவதாக இந்த சூடான விஷயங்களைப் பற்றிப் பேசிவிடுவோம். அந்தப் புகைப்படங்களுக்கு ஒருபுறம் ஹிட்ஸ் மழை பொழிந்தது. மறுபுறம் எதிர்ப்புகளும் அலைமோதின. நான் அதைப் பற்றி மட்டும் பேசினால் எனது பதிவு பத்தோடு பதினொன்றாக , கண்டனப் பதிவாக அல்லது " பொறாமையில்" எழுதிய பதிவாக மாறிவிடும். 

முதலில் இந்த புகைப்படங்களின் விளைவுகளைப் பார்ப்போம். இன்னும் சில நாட்களில் அந்த நடிகையின் பெயரை தேடும்போது ( அவரின் பெயர் வேண்டாம்.) இந்தப் புகைப்படங்களும் இணைந்து கொள்ளும். அவர் நல்ல படங்களில் நடிக்கலாம், அல்லது இன்னும் நல்ல பங்களிப்புகளை வழங்கலாம். ஆனால் இந்த புகைப்படங்கள் அங்கு முன்னிலைப் படுத்தப் பட்டால் அது  அவரது சுயமரியாதைப் பாதிக்காதா? நடிப்புத் துறை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அவரது சொந்த விடயங்களில் தலையிடும் உரிமையை நாம் பெற்றுவிட்டோமா? இதே போன்று சிலவருடங்களுக்கு முன்பு தமிழின் மிகப் புகழ் பெற்ற நடிகையின் அந்தரங்கமும் துகிலுரிக்கப் பட்டது. அது இதை விடவும் அநாகரிகமான வக்கிர புத்தியுடைய செயல். அதையும் மறந்திருக்க மாட்டீர்கள். 

அந்த நடிகை அதற்குப் பின் நிறைய பங்களிப்பை வழங்கிவிட்டார். நல்ல  நடிகை என்றும் பெயரெடுத்துவிட்டார். ஆனால் அவரைப் பற்றிய தேடலில் இந்த செயலும் வருவதை தடுக்க முடியாது. இதே நிலைமைதான் நாளை இவர்களுக்கும் ஏற்படும். 

சில காலத்துக்கு முன்பு இன்னொரு போலிச் சாமியாரின் முகத்திரை கிழிந்தது. பெரும்பாலான மக்களின் உயர் நிலையில் போற்றப் படும் ஒரு " துறவி" என்ற நிலையில் இருப்பவர் என்ற முறையிலும் மத உணர்வுகளைப் புண்படுத்திய குற்றத்துக்காகவும் கட்டாயம் அந்த முகத்திரை கிழிக்கப் படத்தான் வேண்டும். நானும் அவரை என் பதிவில் எள்ளி நகையாடி இருக்கிறேன். ஆனால் அந்த நடிகையைக் காட்சி படுத்தி இருக்கக் கூடாது. ஏனென்றால் அவர் பெண் என்பது மட்டுமல்ல காரணம் . அவர் துறவு நிலை ஏற்றவர் அல்லர். 

ஆனால்  அந்த செயலை ( திரை படங்களில் கூட தணிக்கை செய்யப்பட வேண்டிய அந்த காட்சிகளை) தமிழ் தொலைகாட்சி உலகம் ( குழந்தைகள், சிறுவர்கள் பார்க்கக் கூடிய) ஒளிபரப்பி அழகு பார்த்தது. அவ்வளவும் ஆகட்டும். அந்தத் துறவியாவது நாம் ஒதுக்கினோமா ?  இல்லை . உயர் பீடத்துக்கு அனுப்ப முயற்சியை வெட்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ( அந்த காட்சிகளைப் பார்த்தது போல்) இந்தப் பிழைகள் யாருடையவை? எம்மால் புறக்கணிக்கப் பட வேண்டியவை எவை? 

நடிகர் கமல் பற்றி ஒரு  நண்பர் பதிவை வெளியிட்டு இருந்தார். நான் அப்பதிவை வாசித்துவிட்டு , என் தளத்துக்கு வருமாறு அழைப்பு மட்டும் விடுத்து விட்டு வந்துவிட்டேன். அந்த பதிவுக்கு என்ன மறுமொழி கொடுக்க வேண்டும் என அப்போது யோசிக்கவில்லை  . அப்பதிவு பரபரப்பு பதிவாகவும் அமைந்தது. பிறகு அப்பதிவுக்கு மறுமொழி இட சென்ற போது நிறைய நண்பர்கள் விளக்கமாக, தெளிவாக மறுமொழி இட்டு இருந்தார்கள். 

அவரின் நடிப்பை பற்றி விமர்சிக்க, திட்ட எல்லாவற்றுக்கும் எமக்கு உரிமை உண்டு. " Because that is what he presents to us". மற்ற படி அவருடைய தனிப்பட்ட  வாழ்கையை விமர்சிக்க எமக்கு உரிமை இல்லை. அவரே இதை நேரில் சொல்லி இருக்கிறார். நானும் விஜயின் நடிப்பை எனது தளத்தில் ஒரு முறை விமர்சித்தேன்  . ஆனால் அவருடைய   தனிப்பட்ட  வாழ்கையை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை.
பிரபலங்களின் நல்ல குணங்களைப் பற்றி கூற எமக்கு உரிமை உள்ளது, அது மனித மாண்பு. ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்கையை துழாவாமல் இருப்போம். 

நான் இங்கு சொன்ன விஷயங்கள் கொஞ்சம் தான், எல்லாவற்றையும் கூற ஒரு பதிவு போதாது. எல்லாவற்றையும் மேற்கோள் காட்டியுள்ளேன். அவ்வளவுதான். ஏனெனில் நமக்கு மறதி அதிகம். இப்போதைக்கு இதை பற்றிப் பேசுவோம். பிறகு மறந்து விட்டு அப்போது வரும் பரபரப்புக்கு அடிமையாகி விடுவோம். அதனால்தான் இது முதல் தடவை அல்ல என்று சில உதாரணங்களை சொன்னேன்.    

இப்போது நம்ம ஸ்பெஷல்க்கு வருவோம். இதெல்லாம் கேட்டுட்டோம். நீ புதுசா ஏதாவது சொல்லுனு நீங்க சொல்றது கேட்குது. 
இதைப் பற்றி காரமாக விமர்சிக்க முடியவில்லை என நான் ஏன் சொன்னேன்? நானும் இப்படி சில் மேட்டர்களை பிறகு வெளியிட தடையாக அமையும் என்று நினைத்தா? அல்லது நானும் இந்த வேலை செய்கிறேன் என்ற குற்ற உணர்விலா? இல்லை, பொறாமைப் பட்ரவன்னு பெயர் வருமேன்னா? எதுமே இல்லை. 

காரணம்  என்னன்னா ஒரு அறிவியல் உண்மை.. 
அதான் நம்ம ஸ்பெஷல்.

முதலில் இந்தப் பதிவுகள், புகைப்படங்கள், விடியோக்கள், பத்திரிகை செய்திகள் எப்படி பிரபலம் அடைகின்றன? நாம் பார்ப்பதால் தானே? எத்தனை காலத்துக்கு நாம் மற்றவர்களைக் குறை கூற முடியும்? நம் மீது குறைகள் இல்லையா..? நாம் அந்த பதிவுகளை, செய்திகளை, படங்களைக்  கண்டதும் நாம் என்ன கண்ணை மூடிக் கொள்கிறோமா? இல்லையே! ஏன்? 

போதை தரும் வஸ்த்துக்கள் உலகில் ஏராளமாக உள்ளன. கஞ்சா, அபின், இப்படி ஏராளமாக.. பெயர்கள் வேறு, உற்பத்தியும் வேறு என்றாலும் செயற்பாடு என்னவோ எறத்தாழ ஒரே மாதிரியானவை. 
முக்கியமாக அவை வலி நிவாரணங்கள்.  இது மருத்துவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. 
இரண்டாவது முக்கியத்துவம்தான் தெரியுமே .. அது நம்ம " பிறவிப்பயன்" .
நல்லதை விட கெட்டதை நாடுவதுதானே நம்ம இயல்பு? 

opioids எனும் போது இனங்கள் நம்ம வலி தொடர்பான சிக்னல்களை மூளைக்கு அனுப்புவதை தடுப்பது மட்டுமல்ல .. மைய நரம்புத் தொகுதியின் சில இரசாயன / வேதிப் பொருட்களையும் தூண்டி விடுகின்றன.. இவை பொதுவாக என்டோர்பின் எனப் படுகின்றன. endo என்றால் உள்ளே என்று அர்த்தம். இவை தான் ஆசாமி போதை ஏறியதும் அடையும் பரவச நிலைக்கு காரணம். 

யோவ் ! கிசு கிசு பத்தி சொல்லுனா போதை பதியா பேசுறியானு கேக்குறிங்களா? இருங்க வரேன். 
இந்த என்டோர்பின் தவிர உடலின் உள்ளேயே அதனைத் தூண்டக் கூடிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவற்றைத் தூண்ட பரபரப்பு, இரகசிய விடயங்கள் , அந்தரங்கம் இதெல்லாம் உதவுகின்றன. அதனால்தான் இந்த விஷயங்களில் நமக்கு இவ்வளவு ஆர்வம். 

பத்திரிக்கைகள் கிசுகிசு போட்டு தாகம் தீர்த்துக் கொள்வது ( அடப் போங்க நம்ம இரவின் புன்னகை நம்ம பதிவையும் நடுப் பக்க நடிகை படத்துக்கு ஒப்பிட்டு போட்டார் .). , ஜோதிட மாமணிகளிடம் போய் நம்ம எதிர்கால மனைவியைப் பற்றித் தெரிந்து கொள்வது ..
( அந்த கொடுமைய அறிஞ்சுக்க அவ்வளவு ஆர்வம்) . 
பெண்களைப் பொறுத்தவரை இந்த அகக் காரணிகளை தூண்ட இந்த அடுத்தவர் சங்கதி தேவை படுவதால் ( அதிகமாக) அவர்கள் gossip செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறர்கள். 
( அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? .... இதெல்லாம் அதான்.) 

நம்மதான் இப்படியா? இல்லை. உலகம்  பூரா இப்படிதாம்பா... 
டயானா, டோடி ஞாபகம் இருக்கிறதா? அவர்களின் மரணத்துக்கு முக்கியப் பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு. 


சரி சரி... கொஞ்சம் சீரியஸ் ஆகிடுவோம். 
இந்த விஷயங்களுக்கு எல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்தானே அவற்றை எழுதுகிறார்கள்? அவற்றை மறுத்துவிட்டால் என்ன? அது கொஞ்சம் கஷ்டம்தான் இல்லையா? 

எல்லாம் போகட்டும் . ஆனால் இந்த விஷயங்களை  வெளியிடுகையில், ஊடகங்கள் கவனமாகக் கையாள வேண்டும். அறிவியல் ரீதியான கதைகளை விட்டு விட்டு உணர்வு ரீதியாக கொஞ்சம்  யோசிப்போம்.  இதே நிலைமை நமக்கு நேர்ந்தால். ? நமது அந்தரங்க விடயங்களை நாம் விட்டுத் தருவோமா? எனவே அந்த அடிப்படையில் இது  வேண்டாம் தோழர்களே...

நான் " அந்த " அரசியல்வாதி பற்றிய பதிவில்கூட குடும்ப அரசியல் என்ற ( குடும்ப வளர்ப்பு) என்ற சொல் பாவனைக்கு மிக யோசித்தேன். பிறகு போது வாழ்கையில் மக்கள் நலனை விழுங்கும் அந்த செயல் தனிப் பட்டதல்ல என்ற நியாயத்தைக் கற்பித்துக் கொண்ட பிறகுதான் வெளியிட்டேன்.  
எனவே நண்பர்களே இத்தனையும் யோசிப்போம். மற்றபடி இதுதான் சரி எனத் தீர்மானிக்கும் உரிமை எனக்கு நிச்சயம் இல்லை. நான் கருத்துகளுக்கு முதலிடம் கொடுப்பவன், எனது நிலை இதுதான். 

ஏன் ? இந்தப் பதிவு கூட டிராபிக் தேடி எழுதப் பட்டதுதான். ஆனால் நோக்கம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக உள்ளேன். புகழ் எல்லார்க்கும் பிடித்த ஒன்றுதான். அதுவும் என்டோர்பினை கூட்டக் கூடும். ஆனால் அதை சம்பாதிக்க நாம் எதை நாடுவது? 
அனிருத் ஒரு நல்ல இசையமைப்பாளர் .. முடியும் வரை அவரின் இசையை மட்டும் விமர்சிப்போமே?


பதிவு பிடிச்சுருக்கா? ரெண்டு மெசேஜ் சொல்லிருக்கேன். 
அது சரி... மற்ற திரட்டிகளில் நிறைய வோட்டு விழுது ஆனா தமிழ்மணத்துள் கமெண்ட் வருது, வருகையும் இருக்கு ஆனால் வோட்டு மட்டும் விழ மாட்டேன்குதே  ?  அதுலயும் வோட்டு போடுங்க நண்பர்களே...

( இந்தப் பொழைப்பு பொழைக்குறதுக்கு நீ அப்படி பதிவு போட்டே பிழைக்கலாம் அப்படினு சொல்றது விளங்குது .. ஆனால் பப்ளிக் பப்ளிக்.....)