Saturday, October 16, 2010

'சில்லறை' புத்தி

பல்கலைக்கழக வார விடுமுறைக்காக வீடு வந்து கொண்டிருந்தேன். வழமையான சாகசம்  நிறைந்த பஸ் பயணம்தான். தனியார் வண்டி என்பதால் தன தாராள மனதுடன் பயணிகளைத் திணித்துக் கொண்டிருந்தார் நடத்துனர். 

அழுக்கு உடையுடன் பொலிதீன் பை சகிதமாக உள்நுழைந்தார் அந்த அரைக் கிழவன். முகத்தை வியர்வை ஆக்கிரமித்து இருந்தது. லேசாக குடித்து இருந்தது போலவும் இருந்தது. ஒரு பாண், சில மரக்கறிகள் வகையறாக்கள் பையில் இருந்திருக்கலாம். 

" ஐயா, காசு எடுங்க .." கூட்டத்தில் நீந்தினான் கண்டக்டர். மனிதர் தடுமாறி இருபது ரூபாயை நீட்டினார். 
"இறங்குரப்ப ரெண்டு ரூவா தாரேன்" 

பின்னால்  வந்த அரசுப் பேருந்துடன் ஒரு பந்தயம் காட்டி விட்டு அவசரமாக கிழவனை கழுதைப் பிடித்து தள்ளினான். 
"மிச்சம்..? " 
"பிறகு எடுங்க .. டக்குனு இறங்குங்க..  இறங்குங்க..  "
அந்த  மனுஷர் விடாப் பிடியாய் நின்றார். பின்னால் வரும் பஸ் நெருங்க கண்டக்டர் வேறு வழி இல்லாமல் ஒரு ரெண்டு ரூபாயை முகத்தில் விட்டெறிந்தான்  . கிழவன் எதோ தூஷணம் பேசி விட்டு நகர்ந்து கேட்டது. 

" குடிகாரன், இவனையெல்லாம் ஏத்தவே கூடாது. ரெண்டு ரூபாய்க்கு அலையுறான். " அவனை ஆமோதிப்பது போல சில சிரிப்புகள். 

இந்த சம்பவம் உங்கள் அனுபவத்தை சுட்டுச் சொன்னது போலக் கூட இருக்கலாம். சாதாரண விடயமாய் மறைந்து போயும் விடலாம். ஆனால் சம்யுதாய பிழைகளை எதிர்த்த ஒருவன் ஏன் அவமதிக்கப் படவேண்டும்? 

அந்த  இரண்டு ரூபாய்க்கு ஒரு இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளி படும் பாடு கொஞ்சம் இல்லை. பிச்சைக் காசு என அவமான படுத்தும் இவர்கள் அந்த சில்லறைக் காசுகளில் தானே பிழைக்கிறார்கள்? ஒரு ருபாய் குறைந்தாலும் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? 

குறை இவர்கள் மீது மட்டுமல்ல. அவர்களை ஆமோதித்து சிரிக்கும் நாங்களும் தான் குற்றவாளிகள். 
பள்ளித் தோழிகளின் நமுட்டு சிரிப்புக்கு பயந்து நாகரிகமாக two rupees  இணை விட்டு விடும் இளைஞர்களும் பெற்றவனின் ரெண்டு ருபாய் வேதனை பற்றிப் புரிந்து கொள்வதில்லை. 

படித்தவர் முலாம் பூசிய நாம் போலி கௌரவத்தை உதறித் தட்டிக் கேட்டால் மட்டும் தான் தினக் கூலிகளின் முகத்தில் சேறு பூசும் இவர்கள் திருந்துவார்கள்.  

Thursday, October 7, 2010

த்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்

ஒருவாறாக  த்ரீ இடியட்ஸ் படம் முடிவாகி இருக்கிறது. ( தலை முழுகுதல் அல்லது நேர்ந்து விடல் என்று சொல்லலாம். ) 
அனைவரின் விருப்பத்துக்கமைய (??). விஜய் நாயகனாக நடிக்கிறார். எல்லாம் நன்மைக்கே என விதியை நொந்து கொள்வோம். படம் எப்படி இருக்கலாம் என ஒரு முன்னோட்டம் பார்க்கலாம். 

படத்தின் தலைப்பே கதையை சொல்லும். தளபதியை முட்டாள் என்று சொல்ல எந்த கொம்பனுக்கும் அருகதை இல்லை என்பதால் இந்த பெயர் என்பதை கருத்தில் கொள்ளவும். தமிழ் வளர்க்கும் செம்மலின் ஆலோசனை, வரிவிலக்கு என்பவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ் பெயர். தமிழுக்கேற்ற ( தளபதிக்கேற்ற?) மாற்றங்களும் உண்டு என்பதை கருத்திட் கொள்க. 

தலைவர்  get -up  மாறாமல் வந்து திரையில் நின்றாலும் அவரை இருபது வயது கல்லூரி மாணவன் என நம்ப வேண்டிய கடமை ரசிகர்களாகிய எமக்கு உண்டு என்பதை ஒரு காலும் மறக்க வேண்டாம். (இதை வாசிக்க முன்பு ஹிந்தி படத்தை மறவாமல் ஞாபகப் படுத்திக் கொள்ளவும். ஏனெனில் தமிழில் பார்க்கும் போது படத்தையே வெறுத்து விடலாம்.) 

பட   போஸ்டரில் விஜய் ஆஜானுபாகுவாய் நிற்க பக்கத்தில் ரெண்டு பாவப் பட்டவர்கள் பரிதாபமாய் நிற்கிறார்கள். படம் முழுக்க தளபதியே வருவதால் அவர்களை விட்டு விடலாம், பாவம். 

அமீர் கான் போலவே ராக்கிங் நேரத்தில் என்ட்ரி கொடுக்கிறார் விஜய். ஆனால் அந்த கணத்தில் ஐந்து பேர் தோன்றி ஒன்னாக இணைகிறார்கள். அங்குதான்பா தலைவர் நிற்கிறார். ராக்கிங் தொல்லையால் கஷ்டப் படும் எல்லோரும் " இதுகெல்லாம் முடிவு கட்ட யாரும் இல்லையா என அலறும் காட்சி இருப்பதாக ஒரு கொசுறுத் தகவல். 

அந்த  நேரத்தில் சீனியர் முகத்தில் கரி பூசி விட்டு அவர்களோடவே ஒரு opening சாங் பாடி ஆடுகிறார். அதில் வழக்கம் போலவே எமக்கெல்லாம் அறிவுரை மழை உண்டு. அப்படியே தலைக்கு " மிரட்டல் மெசேஜ் உண்டு. தன்னோடு நடிக்க வராத ஒருத்தருக்கு விடுறாரு பாருங்க டோஸ்! அதற்குப் பின் அடுத்த படத்துக்கு அவரே சான்ஸ் கேட்டு கெஞ்சுவார் பாருங்க. 


 பேப்பர் திருடி அகப் பட்ட பின்பு professor அடிக்க வாரார். " மேல கை வைக்க முன்ன ஒரு தடவைக்கு ......" பேசுறாரு பாருங்க . விசில் மழை.. 


நிச்சயம் பண்ணப் பட்ட தமிழ் கரீனா கபூர் இற்கு பொண்ணுன்னா எப்படி இருக்கணும்னு lecture அடிக்கிறார். ( ஏற்கனவே பல படங்களில் நிச்சயம் பண்ணப் பட்ட பெண்களை கவர் பண்ணிய அனுபவம் இருப்பதால் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. ) 


ஒரு    தனி டூயட் சாங், ஒரு குத்து உண்டு. மிகுதி ஒரு பாட்டில் விஜய் காலை வளைத்து வளைத்து ஆடுவதை வியப்புடன் பார்க்க மற்ற இருவருக்கும் சான்ஸ் வழங்கப் படும். 


நண்பன் அடி பட்டவுடன் ஆம்புலன்ஸ் மக்கர் பண்ண highway இல் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். முடிந்தால் சிகிச்சையும் பண்ணுகிறார். படத்தில் ஏராளமான நல்ல கருத்துகள் தெளித்து விடப் படும். நண்பனின் வறுமை கட்டும் இடத்தில அரசியலும் உண்டு. ( மேலிடத்துக்கு கோபம் ஏற்படாத வகையில்!)


படத்தில்   ஒரே குறை. சண்டைக் காட்சி இல்லையே. ஆனால் கரீனாவை ரௌடி  கும்பலை விட்டு கிண்டல் பண்ண விடலாம். ஆனால் அதில் ஒரு பெரிய ரிஸ்க் உண்டு. கதை மாறி விஜய் 
ரௌடி  கும்பலை வதம் செய்ய புறப் பட்டு விடலாம். சோ அந்த ஐடியா கான்செல். ஆகவே காமெடிக்கு கொடுப்பது போல தனி track கொடுக்கலாம்.


 காமெடி பற்றி கவலையே இல்ல. அவரின் நடிப்பைப் பாத்தாவே போதும். 


சொன்னது கொஞ்சம் தான். திரையில் பாருங்க அசந்து போய்டுவிங்க. முடிந்தால் உங்கள் சீன் களையும் அனுப்பி விடுங்கள். புண்ணியமாய்ப்  போகும்.  


பி.கு. 
என்னைத் திட்டும் நண்பர்களே! 
இந்த கட்டுரையின் ஒரே நோக்கம் தளபதியை உசுபேற்றியாவது நடிக்க சொல்லத் தான். அவரின் திறமை பழைய படி வெளிக் காட்டப் படத் தான். நல்லா வந்த சந்தோஷமாப் பாக்கப் போறது நானும்தான்.  



Wednesday, October 6, 2010

ஆசியர்கள் காட்டுமிராண்டிகளா?

கிரிக்கெட் மறுபடி ஒரு சூடான சர்ச்சைக் களமாகி விட்டது. முதலில் பாகிஸ்தான் சூதாட்ட விவகாரம். பின்பு பந்து சுரண்டும் படலம். இவற்றையெல்லாம் தட்டிக் கேட்கும் நாயகன் டேரல் ஹெயார். சாட்ஷாத் முரளிக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அதே நாயகன் தான். 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முறைகேடாக நடந்ததை யாரும் மறுக்கவோ மன்னிக்கவோ முடியாது. ஆனால் அதற்கு ஹெயார் கூறியிருக்கும் விளக்கங்கள் அற்புதமானவை. 

" பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நாகரீகம் தெரியாதவர்கள். அவர்கள் விளையாட்டை சரியாக விளையாடத் தெரியாதவர்கள். மற்ற அணியை எதிரிகளாகப் பார்ப்பார்கள்.எதிரணி வீரர்களை வசை பாடுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. :" இப்படியெல்லாம் தொடர்கிறது ஹெயாரின் செய்யுள். 

சொல்பவரின் அணியின் லட்சணம் உலகே அறியும். எதிரணி வீரர்களை மிக மோசமாக வசை பாடுவதில் ஆஸ்திரேலியர்களை மிஞ்ச முடியுமா? நிறவெறியின் உச்சம் அல்லவா அவ்வணி? மற்ற அணியின் பலத்தை குறை கூறுதல், தோற்று விட்டால் நொண்டி சாக்கு சொல்லுதல் இதற்கேல்லாம் ரிக்கி பாண்டிங்கை விட ஒரு சிறந்த உதாரணத்தை சொல்ல முடியுமா? கடந்த போட்டியில் கூட ஆட்டமிழந்து விட்டு அநாகரிகமாக பாட்டை தூக்கி சேட்டை செய்தவர். இதெல்லாம் ஏன் ஹெயாருக்கு தெரியவில்லை? 

Ricky Ponting exchanges words with India's fielders after his dismissal 


யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். ஆனால் அதற்காக ஒருகுறிப்பிட்ட அணியை அல்லது நாட்டை எப்படி குறை கூறி தாக்க முடியும்?  இவரின் வெறி பாகிஸ்தான் அல்லது குற்றங்கள் மீதல்ல. ஆசியர்கள் மீது. 
முரளியின் விடயம், இந்திய வீரர்களைத் தூற்றுதல் இந்த விடயங்களால் எதை வெளிக் காட்டுகிறார்? விளையாட்டு உணர்வு மக்கிப் போய் கிடப்பது ஆசிய மண்ணில் அல்ல. 


Tuesday, October 5, 2010

எந்திரன் எப்படி இருக்கிறான்?

மற்றுமொரு நீண்ட உழைப்புக்குப் பின் ஷங்கரின் படைப்பு ஒன்று வெளிவந்து இருக்கிறது.
"ஷங்கரின் படைப்பு ", என்றவுடன் ரஜினி ரசிகர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம், அதற்கு காரணமும் சொல்கிறேன்.

ஷங்கர் ஒரு தனித்துவமான இயக்குனர் என்பதில் எனக்கு எந்த மாறுபட்ட கருதும் இல்லை. தமிழ் சினிமாவில் பல புதிய விடயங்களை புகுத்தியவர். ஆனால் அவர் பற்றிய விமர்சனங்கள் பல உண்டு.அவரது படங்களில்  முன்னைய படங்களின் சாயல் தெரியும். லாஜிக் மீறிய தன்மை, நடைமுறை யதார்த்தத்துக்கு ஒத்து வராத நியாயங்கள்.... இப்படி எல்லாம். எந்திரன் இதில்  சில தன்மைகளைக் கொண்டிருக்கிறான். ஆனால் விஷயம் என்னவென்றால் திரைப் படத்தின் பலமே அதுதான்.

ஒரு தரமான அதியுயர் தொழில்நுட்பப் படைப்பைப் பார்த்த அனுபவம் கிடைக்கிறது. ஹாலிவுட் படமல்ல. ஏனெனில் நம்மவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.

 ஷங்கரின் கனவுப் படம். கொஞ்சமும் அலுக்க வைக்காத திரைக்கதை ஓட்டம். வேகமான தடங்கல் இல்லாத entertainer . இடத் தெரிவுகள் பற்றி சொல்லத் தேவையே இல்லை. சலித்து எடுத்திருக்கிறார். ஆனால் எல்லாவற்றையும் விழுங்கித் தின்றிருக்கிறது, கிராபிக்ஸ். செயற்கை என்று சொல்லவே முடியல. அதில் கூடுதல் கவனம், ரிஸ்க் எடுத்திருக்கிறார். ஏனென்றால் சில அருமையான விஷயங்கள் இதற்கு முன் கார்டூன் ஆன சந்தர்பங்கள் இருக்கின்றன.

பின்னணி இசை தனியாகத் தெரியவில்லை. கதையோடு ஒட்டி விட்டது. ஆஸ்கார் நாயகர் புகுந்து விளையாடிவிட்டார். கிலிமாஞ்சாரோ அரங்கை விட்டு வந்த பின்பும் காதிலேயே ஒட்டிக் கொண்டு விட்டாள்.

சண்டைக் காட்சிகள் இது வரை பார்க்கவே இல்லை. தமிழ் பட சண்டையா அது? Robot எப்படி மிரள வைக்கிறான்? + என்னவென்றால் வன்முறை வெறித் தனமாக ஒரு இடத்திலும் காணக் கிடைக்கவில்லை. மாறாக ஒரு வேகமான கால்பந்து ஆட்ட பார்த்த மாதிரி இருக்கிறது. கடைசி இருபது நிமிடங்கள் இருக்கையில் கட்டிப் போடுவது சண்டைக் காட்சிதான்.

திரைப் படத்தில் இன்னும் பலரின் உழைப்பு சுட்டிக்காட்டப் படாவிட்டாலும் , எல்லோருக்கும் ஒரு அருமையான படத்தைத் தந்ததற்கு நன்றிகள்.

படத்தில் ரஜினி, ஐஸ்வர்யா, ரோபோ ஆகிய மூவரும்தான் highlights . திரைக் கதையில் அது தேவையும் கூட. வில்லன் கொஞ்சம் மிரட்டி இருக்கிறார், கத்தாமல் அந்த mind game வில்லத் தனத்துக்கு ஒரு...... ஆனால் ரோபோ வில்லத் தனத்துக்கு முன்னாள் எல்லாம்.... "மே..மே..மே." ரசிகர்களை இப்படி மிரட்ட ரஜினிக்கு முடியுமா?
"இது எப்டி இருக்கு?"

ஐஸ்வர்யாவின்  வயது கொஞ்சம் இடிக்கிறது. ஆனால் உலக அழகிதான் என்பதை எந்த கொம்பனாலும் மறுக்க முடியவில்லை. மறுபுறத்தில் ஒரு இளைஞனோடு அல்லவா நடிக்கிறார்? ரோபோவுக்கு அல்ல... ரஜினிக்கு வயதே இல்லை.

கடைசியாக, "ஷங்கரின் படைப்பு " என்பதற்கு காரணம் சொல்கிறேன். சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி ஷங்கரின் கனவே வாழ்ந்து கொடுத்திருக்கிறார். கலாபவன் மணியிடம் தப்பி ஓடுகிற காட்சியில் ..... இமேஜ் பார்த்தால் இப்படி நடிக்க முடியுமா? அதனால்தான்  சூப்பர் ஸ்டார் .
தன்னை அடுத்த ராஜாவாக பீற்றிக் கொள்ளும் தளபதிகளுக்கு ஏன் இது புரியவே இல்லை?

குறை என எனக்குத் தெரிவது இரட்டை அர்த்த வசனங்கள்தான். அது தமிழ் சினிமாவின் சாபக்கேடா எனத் தெரியவில்லை!
என்னைப் பொறுத்த வரை இலங்கையில் நீண்ட வரிசையில் இப்படி நின்று, பெரும் கூட்டத்துடன் படம் பார்த்து நெடுநாளாகிறது. மறக்காமல் ஒரு முறையாவது பார்த்து விடுங்கள்.

Friday, October 1, 2010

ஒரு யுகப்புரட்சியாளன், சே குவேரா

கம்பீரமான இந்த முகத்தை நீங்கள் பலமுறை கடந்திருக்கக் கூடும். இளைஞர்களின் மேற்சட்டை முதுகுகளில் அவர்களை அறியாமலே ஒரு மாவீரனை தாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கலாம். கம்பீரமான இந்த முகத்துக்கு சொந்தக்காரன், சே குவேரா. 


சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா .(Ernesto Guevara de la Serna)
ஆர்ஜெண்டினாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி. ஒரு போராளி. 


சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.


வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.


, மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.


1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெருநாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. 


பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார்.


சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம்  கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 இல் நாட்டை விட்டு வெளியேறினார். 


பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில்ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். விசாரணைகள் இன்றியே கொல்லப் பட்டார்.இறக்கும் போதும் கண்களை மூடவில்லை அம்மாவீரன். தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார். 


அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. 


(ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்)


கட்சி பதவிகளுக்காக நாளொரு கொள்கை மற்றும் இன்றைய தலைவர்களுக்கு முன்னாள் சே ஒரு அமானுஷ்ய மனிதன். கொள்கையோடு கடைசி நிமிடம் வரை போராடித் தீர்த்த வீரர்களை உலகம் அரிதாகவே காண்கிறது.அவர்களின் உயிர் தற்காலிகமாக சரிந்தாலும் , நாளை வரலாறு அவர்களை அனைத்துக் கொள்ளும்.