Tuesday, November 26, 2013

இலங்கையில் திசை திரும்பும் இனவாதம்

இலங்கையின் யுத்தம் முடிவுற்ற பின்னர் வசந்தம் வீசும், பொன்மழை பெய்யும் என்றெல்லாம் பேசிய காலம் ஒருவாறு முடிவுக்கு வந்து விட்டது. அதுதான் தமிழர்கள் தோற்று விட்டார்களே ! இனி எதற்கு அவர்களுக்கு தீர்வு? என்ற பேச்சு வலுப் பெறத் துவங்கி உள்ளது.

உணர்வு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் காயமடைந்துள்ள தமிழர்கள், மௌனிக்கப் பட்டுள்ள நிலையில்; பேரினவாதிகளின் கழுகுக் கண் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களை நோக்கித் திரும்பியுள்ளது .

கடந்த இரண்டு வருடங்களாகவே திட்டமிடப் பட்டு முஸ்லிம்கள் மீது திருப்பி விடப் பட்டுள்ள இனவாதம் பேரினவாதிகளின் வாக்குப் பெட்டிகளை நிறைக்கும் திட்டமாகத் தான் தோன்றுகிறது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப் பட்ட நிலையில் இனவாத அரசியல் பேசியவர்களுக்கு கொஞ்சம் வேலை இல்லாமல்தான் போய் விட்டது.

இந்த நிலையில் பேரினவாதிகள் கையில் எடுத்துக் கொண்டுள்ள அடுத்த ஆயுதம், முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்ச்சி.

முஸ்லிம்கள் தங்களுடைய கலாச்சாரத்தை அழிக்க முயல்வதாக, சனத்தொகையை அதிகரிப்பதாக, அடிப்படைவாதிகள் என, மதமாற்றம் செய்வதாக என இவர்கள் கூறும் காரணங்கள் பல.

இந்தப் பிரச்சனையின் அண்மைய கூறுகளை கவனிப்போம். முதன் முதலாக இவர்களின் கையில் அகப் பட்டது, ஹலால்.
நாட்டின் சிறுபான்மையினருக்காக சிங்களவர்களும் ஹலால் உணவையே உண்ண வேண்டும் என முஸ்லிம்கள் கட்டாயப் படுத்துவதாக பிரசாரம் செய்யப் பட்டது. உண்மையில் அவரவர் விருப்பத்துக்கு விரும்பிய உணவுகளை கொள்வனவு செய்யவும் விரும்பிய இடங்களில் உணவைக் கொள்வனவு செய்யவும் யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் இனவாதம் கண்ணை கட்டிப் போடுகிறது.

இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெளிப்பட்ட பின்னர் ஹலால் முறை ஒழிக்கப் பட்டது. பல நிறுவங்கள் தங்கள் ஹலால் சான்றிதல்களை  பெற்றன. ( வியாபார நோக்கம் கருதி)
ஆனால் இனவாதிகளின் ஆசை முடிந்தபாடில்லை. முஸ்லிம்களின் வர்த்தகப் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்ற பிரச்சாரம் இன்றளவும் தாராளமாக நடக்கிறது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக முஸ்லிம் பள்ளி வாசல்களை ' புனிதப் பிரதேசங்களில் இருந்து அகற்றும் நடவடிக்கை முடுக்கி விடப் பட்டது. ஆனால் அரசில் தொங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களோ மதில் மேல் பூனையாக மௌனம் காத்தனர்.
ஆனால் ரமழான் பெருநாள் அன்று கொழும்பில் நடந்த அசம்பாவிதம் முழு நாட்டையும் உலுக்கி விட்டது.

இவை போதாதென்று முஸ்லிம்களின் அபாயா எங்கள் அடுத்த இலக்கு என்று சவால் விடுக்கப் பட்டுள்ளது.

இதன் விளைவுகளை கவனிப்போம்.
சற்று அணைந்து போயிருந்த இனவாத நெருப்புக்கு தீனி போடுவதாக இச்சம்பவங்கள் மாறும்.

யுத்தம் முடிவடைந்த நிலையில் முஸ்லிம்களும் பட்டாசு வெடித்து அதனைக் கொண்டாடினர். அதன் எதிர் விளைவுகளை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதில் சிக்குண்ட பல்லாயிரக் கணக்கான அப்பாவிகள் மனம் அதனால் பாதிக்கப் படக் கூடும் என்ற விடயம்  மனதுக்கு தோன்றாமல் போயிருக்கலாம். அதற்கு அவர்களின் கசப்பான / நியாயமான அனுபவங்களும் ஒரு காரணமே.

இந்நிலையில் முஸ்லிம்களின் கலாசாரத்துக்கு எதிராக இனவாதிகளால் அவிழ்த்து விடப் பட்டுள்ள வன்முறைக்கு தமிழர்கள் மெளனமாக துணை போவதையும் வங்குரோத்து மனப் பாங்கே வெளிக் காட்டும்.

சிறுபான்மை இனத்தவர்கள் பிரிந்து நிற்கும் வரை இனவாதிகளுக்கு கொண்டாட்டம்தான் என்பதை நாம் உணராத வரை சந்தோஷமாக அதனை அனுபவிக்கப் போகின்றவர்கள் சிறுபான்மை அரசியல்வாதிகள் மட்டும் தான். ( இந்த பிரிவில் ,அடிப்படைவாதம் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ் இனவாத அரசியல்வாதிகளும் )

( முழுதாக எழுத நினைத்த பழைய பதிவு. ஆனால் சந்தர்ப்பத்துக்கு பொருத்தமாக அமைந்ததால் பதிவிட்டேன். குறைவுக்கு பொருத்தருள்க...)



Wednesday, July 10, 2013

சில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்





இரானியச் சிறுவன் அலி... தன்னுடைய தங்கையின் செருப்புகளை தைத்து முடிக்கப் பட்டபின் வீட்டுக்கு தூக்கிச் சென்று கொண்டிருக்கிறான். வழியில் கடையொன்றில் உருளைக் கிழங்குகளை காணும் அவன், அவற்றை வாங்குவதற்காக கடைக்குள் நுழைகிறான். 

உள்ளே நுழையும் அவசரத்தில் தன்னுடைய தங்கையின் செருப்புகளை வெளியே விட்டு விடுகிறான். தற்செயலாக அங்கு வரும் குப்பைகளை சேகரிப்பவன் அவற்றை தனது வண்டியில் போட்டு கொண்டு சென்று விடுகிறான். 

இப்படி ஆரம்பிக்கிறது அந்த இரானிய சினிமா....

வெள்ளைக்காரர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. தங்களின் படைப்புகள், முயற்சிகள் எதோ மிகச் சிறந்தவை என்றும் மற்றவர்கள் படைப்புகள் தமக்கு கீழே என்பது போன்ற மனப் பாங்குதான் அது. 

அந்த மனப்பான்மைதான் அவர்களை பல நூற்றாண்டுகள் உலகை ஆள வைத்தது. 
ஆஸ்கர் விருது அதற்கு நல்ல உதாரணம். நல்ல திரைப்படங்களை எடுப்பதில் தாங்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டு தங்கள்  படங்கள் போக சிறந்த வெளி நாட்டுத் திரைப்படம் என்று விருது கொடுத்து கௌரவப் படுத்தும் செயல் அதற்கு நல்ல உதாரணம். 

உலக சினிமாவை ஆழ்ந்து பார்ப்பவனுக்கு சில வெளிநாட்டுத் திரைப்படங்கள் முன் ஹாலிவூட் திரைப்படங்கள் தூ தூ என்றாகிவிடும் .... 

துரதிருஷ்ட வசமாக இதெல்லாம் சொல்லி கொண்டு திரியும் நம் அனைவருக்குமே அந்த விருதின் மேல் கண் உண்டு... ( ஹீ ஹீ....)

இவ்வளவும் எதற்கு சொல்கிறேன் என்றால் நான் சொல்லப் போகும் இந்த திரைப்படத்துக்கு நான் மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் சட்டென ஒத்துப் போகும். 

" Children Of Heaven " . என்ற திரைப்படம். 
உலக சினிமா பார்க்கும் அனைவருக்கும் வாய்ப்பாடமான ஒரு திரைப்படம். 

இனி நம்ம பாணியில் படத்தை அறிமுகப் படுத்தி விடுவோம். 

தமிழ் திரையுலகில் பிரபலமான ஒரு கூற்று உண்டு.

" தமிழில் ஒரு திரைப்படம் எடுக்கும் செலவில் இந்தியில் ஒரு பாட்டு தயாரிக்கப் படுகிறது. ஏனெனில் சந்தை வாய்ப்பு அப்படி. "

வர்த்தக நோக்கோடு குத்துப் பாட்டுகள், ஆபாச அம்சங்களைப் புகுத்துவதற்காக நம்மவர்கள் சொல்லும் நியாயமான சாட்டு இது. இதனை ஏற்றுக் கொண்டோம் என்றால் நாமெல்லாம் ரசனை கெட்டவர்கள் என்று பச்சையாக ஒத்துக் கொள்வதற்கு சமம்.

ஏன் ? குறைந்த செலவில் மனதை வருடும் படியாக திரைப் படங்களை தயாரிக்க முடியாதா?
யோசிக்க வேண்டிய விஷயம்தானே?

அதற்கு உதாரணமாக ஒரு நல்ல திரைப்படத்தை சுருக்கமாக அறிமுகப் படுத்துகிறேன். உலக சினிமா ரசிகர்களுக்கு இது பரம பரிச்சயம் என்றாலும் பார்க்காதவர்களையும் பார்க்க சொல்வோம்...



திரைக்கதை 

மிகவும் எளிமையான திரைக்கதை. ஆனால் அழகான ஒரு கதையம்சம் , தெளிவான கதையோட்டம் எல்லாம் உண்டு. தெஹ்ரானில் வாழும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தங்கையின் கதை. 

கதை முழுக்க இரு பிஞ்சு இதயங்களின் மனதைப் பற்றி பேசுகிறது. இயற்கையாகவே ஊன்றிப் போகும் சகோதரப் பாசம், பிஞ்சு வயதிற்கான பயங்கள் , ஆசைகள் எல்லாவற்றையும் காட்டுகிறது. 

தான் தவறித் தொலைத்து விட்ட தங்கையின் செருப்புகளை மீட்க  ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்கிறான் அலி. இறுதியில் அவன் வென்றானா, தனது தங்கையின் செருப்புகளை மீட்டானா என்பதே மீதிக் கதை. ஆனால் அந்த கதையில் மிகச் சுவாரசியம் உண்டு. 

படத்தை மஜீத் மஜீதி என்ற  அருமையான இயக்குனர் இயக்கி இருக்கிறார்.

விருதுகள்

 தேசிய விருதுகள் பலவற்றை அள்ளிக் கொண்டது. இதில் என்ன சிறப்பு என்றால் 1999 ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டது. இந்த விருதுக்கு பரிந்துரைக்கப் பட்ட முதல் இரானிய சினிமா இதுதான். 

அதே ஆண்டில் வெளி வந்த " Life is beautiful " என்ற திரைப்படம் மூலமாக அந்த விருது கிடைக்காமல் போனது. 

ஆனால் முதன்முதலாக இரானிய சினிமாவை உலகம் எட்டிப் பார்க்க வைத்தது இந்த திரைப்படம்தான். 
( எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. இலங்கையில் வீரகேசரி வார இதழில் அலைவெளி பக்கம் மூலம் இரானிய சினிமா பற்றி எழுத தனித் தொடரே ஒதுக்கப் பட்டது. )

வசூல் 
படம் வசூலில் அள்ளிக் குவித்து விடவில்லை. 2 லட்சம் டாலர் செலவழிக்கப் பட்டு 16 லட்சம் டாலோர்களை வசூலித்தது . இந்த அருமையான திரைப் படத்துக்கு அது மிகக் குறைவே...

விமரிசனம் 

பொதுவாக நல்ல வரவேற்பைப்  பெற்றது. குறிப்பாக அருமையான கதை என்று புகழப் பட்டது. ஆனால் குறை கூற வேண்டும் என்று நினைத்தவர்கள் , கதை ரொம்ப சிம்பிள் ஆ இருக்கே என்று அங்கலாய்த்துக் கொண்டனர்....

ஆனால் சில விமர்சகர்கள் தி bicycle thieves திரைப்படத்துக்கு ஒப்பிட்டு விமர்சித்தார்கள்.

முன்பே கூறியது போல உலக அரங்கில் இரானிய சினிமா கவனிப்பை பெற்றுக் கொள்ள இந்தத் திரைப்படம் ஒரு துவக்கப் புள்ளி.

IMDB : 8.2/10

கவனிக்கத்தக்கவை 

திரைப்படம் பார்த்து விட்டு வரும் யாருக்கும் மறக்க முடியாத  அம்சம் அந்த இரு குழந்தைகளின் அற்புதமான நடிப்பு. யாருமே வியக்கும் வண்ணம் மிகைப்படுத்தாமல் அருமையாக நடித்து உள்ளார்கள்.

தன் தங்கையின் பாதணிகளை அணிந்திருக்கும் சிறுமியைப் பின் தொடர்வது, ஆனால் அந்த பாதணிகளை தவறாக எடுத்தவர் ஒரு குருட்டுக் கிழவன் என்பதையும் அந்த சிறுமியின் ஒரே உறவு அவர்தான் என்பதை அறிந்து இவ்விரு குழந்தைகள் தவிப்பதும் காட்டப் படும் காட்சி அப்பப்பா.... !

இருவரும் ஒரே பாதணிகளை மாறி மாறி பயன்படுத்துவதும் அதனால் அலி தாமதமாகி அலி தண்டிக்கப் படுவதும் மனதை

கதையில் வில்லன்கள் கிடையாது. எல்லோரும் சூழ்நிலைக் கைதிகள்.

படு இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல காட்சிகளை ரகசிய காமிராக்கள் மூலமாக எடுத்து இருக்கிறார்கள். அதனாலோ என்னவோ காட்சி அமைப்புகள் சில நமக்கு புதுமையாகவும்,  சில விநோதமாகவும் உள்ளன.

எல்லா சிறுவர்களும் வெற்றி பெரும் வெறியோடு ஓட அலி செருப்புகளுக்காக ஓடும் இறுதிக் காட்சிகள் அருமையாகப் படமெடுக்கப் பட்டிருக்கும். எத்தனையோ உச்சகட்ட காட்சிகள் ஓட்டப் பந்தயத்தில் முடிந்துள்ளன. ஆனால் இந்த திரைப்படத்தில் அதே பழக்கப் பட்ட சுவாரசியம்.

செலவுன்னு என்னத்தை கணக்கு காட்டினாங்களோ தெரியாது. ஆனால் எதோ போற போக்கில் உண்மையான குடும்பங்களை தான் காட்டுறாங்களோ அப்டின்னு தோணும். ரொம்ப சிக்கனம் தான்.
பின்குறிப்பு 

நீங்கள் டப்  பண்ணிய தெலுங்கு படங்களை மட்டுமே ரசித்து பார்ப்பவராக அல்லது " டேய்.. வண்டிய எடுடா..." ரகம் படங்களை மட்டுமே பார்ப்பவராக இருந்தால் சத்தியமாக இந்த படம் உங்களுக்கு பிடிக்காது . அல்லது சின்னப் புள்ளைங்க படம்னு ஒதுங்கிடுவிங்க..."

ஆனால்  பல துறைப் படங்களிலும் ஒரு ரவுண்டு வருபவராக இருந்தால் ம்ம் கிளப்புங்கள்....



Monday, June 24, 2013

இனவாதமும் ஒரு இளைஞனும் ...

மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப் பட்ட பின்னர் எதிர்பாராத , எதிர்பார்த்த திருப்பங்கள் இலங்கையில் ஏற்பட்டு வருகின்றன . 

ஒரு பக்கம் கடும் போக்கு வாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வந்தாலும் மறுபக்கம் தமிழர்களின் பிடி முழுமையாக நழுவி வருவதைக் காணும் போது  கவலையாக இருந்தாலும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் நெஞ்சங்களை காணும்போது மனதுக்கு ஆறுதலாகத்தான் இருக்கிறது. 

இனவாதம் என்பது அடிப்படை லட்சணங்களில் மாறாத பரிமாணம் உடையது. சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதங்கள் அதற்குக் கிடையாது. 

( சிறுபான்மை இனவாதம் : தென் ஆபிரிக்க நிறவெறி ஆட்சி, வருணாசிரமம்..
பெரும்பான்மை இனவாதம் : இந்தி திணிப்பு, இலங்கை...)

தங்கள் இனம் சார்பான தகவல்கள் வரும்போது அதனை ,மட்டுமே ஊதிப் பெருசாக்குவதும் அதே மற்ற நேரங்களில் அடக்கி  வாசிப்பதும் தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது . இலங்கையின் சிங்கள, தமிழ் பத்திரிக்கைகளும் இதே பணியை செவ்வனே செய்கின்றன . 

தனது இனத்தவர்களிடம் தாங்கள் மட்டுமே ஏமாற்றப் படுவதாகவும் மற்றவர்கள் சுக வாழ்க்கை வாழ்வதாகவும் ஒரு மாயத் தோற்றத்தையுமே இவை உருவாகுகின்றன. 

இலங்கை அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இலங்கையின்  பகுதிகளிலும் வழங்கப் படும் ஆள் அடையாள அட்டையில் சிங்கள மொழியில் கட்டாயம் பெயர் அச்சடிக்கப் படும். 

சிங்களவர்களுக்கான அட்டையில்  சிங்களத்தில் மட்டுமே  இருக்கும் அதே வேளை தமிழர்களுக்கு மட்டும் கூடவே  தமிழில் எழுதப் படும். இது ஓர  வஞ்சனை என்பதும் இதில் ஒரு தேசிய மொழி புறக்கணிக்கப் படுவதாகவும் கூறியே இந்த வழக்கு. 

இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இந்த வழக்கை தொடர்ந்தவர் தமிழர் அல்லர். மஹரகம என்ற இடத்தை சேர்ந்த இசுரு கமகே என்ற 18 வயதே நிரம்பிய சிங்கள இளைஞன் ...

வழக்கின் தீர்ப்பு எக்கேடோ கெட்டுப் போகட்டும்... அடுத்த இளைய தலைமுறை இந்த வன்மம் கொண்ட சாபக் கேட்டில் இருந்து விடுபட்டு விடும் என்ற ஒரு சிறு நிம்மதியாவது கிடைக்கிறது அல்லவா? 

வேடிக்கை என்னவென்றால் இந்த செய்திக்கெல்லாம் தமிழ் பத்திரிக்கைகள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. வழக்கம் போல இனவாதிகளால் அந்த இளைஞன் துரோகி எனப் படுவான்.... போனால் போகட்டும் ... அந்த இளைஞனுக்கு மனதார ஒரு நன்றியைக் கூறி விடுவோம்...