Thursday, September 2, 2010

ஹிட்லரின் ஒற்றை விதை...

சமீபத்தில் படித்து நான் மிகவும் வியந்த, ரசித்த புத்தகம், " மனிதனுக்குள் ஒரு மிருகம்". சந்தேகமே இல்லாமல் மதன் தனது முத்திரையினை பதித்து இருந்தார். மதனுடன் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அவர் எழுத்துகள் மூலமாக. அனைத்து  தரப்பினரையும் கட்டிப் போடக் கூடிய லாவகம் அவருக்கு உண்டு.  
எல்லா மனிதர்களுக்குள்ளும் மிருகம் உறங்கிக்கொண்டு இருப்பதை தெளிவாக நிறுவி இருக்கிறார். வாசித்த அனைவரையும் தம் ஆழ்மனதை ஒரு தடவை தடவிப் பார்க்க வைத்து விட்டார். 




வரலாற்றில் வர்ணிக்கப் படும் கொடுரர்களாக நாமும் மறைமுக முகத்திரையினை கொண்டிருப்பதை சுட்டிக் காட்டிவிட்டார்.
மீண்டொரு தடவை உங்களைச் சந்திக்கையில் இப்புத்தகம் தொடர்பான விடயங்களை மறக்காமல் பகிர்ந்து கொள்வேன். 


சரி விடயத்துக்கு வருகிறேன். சமகாலத்திலும் மனித உணர்வு சிதைக்கப் பட்டு, மிருகத் தனம் வெளிப்படையாக உலவுவதைக் காணவும், அவற்றுக்கு காரணமாகவும் நாம் இருப்பதை அறிந்தோ அறியாமலோ இருந்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மனிதநேயம் பற்றி பேசுவதும் நாங்கள்தான். 
அன்றாட பத்திரிகைச் செய்திகள் கூட இதை காட்டிக் கொடுக்கின்றன. வாரப் பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். முழுப் பக்கம் ஒன்று ஹிட்லருக்காக ஒதுக்கப் பட்டிருந்தது. சர்வாதிகாரி ஹிட்லரின் விறைப் பையில் ஒரு விதை மட்டும் இருந்ததாம். ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்களாம். சாதாரண செய்திதான். ஆனால் அதன் பின்னணி என்ன? கொடூர ஹிட்லரை பரிகாசப் படுத்துவதுதான் நோக்கம். ஹிட்லரின் குற்றங்கள் ஜீரணிக்கவே முடியாதவை. யாராலும் நியாயப் படுத்தவே முடியாதவை. ஆனால் இவ்வளவு ஆண்டுகள் முடிந்த பின்பும் , இறந்த ஒருவனை பழிவாங்கத் துடிக்கும் வன்மத்தை என்னவென்பது? 


இது புதிய விடயம் அல்ல. ஹிட்லர் நரமாமிசம் உண்பவர், இறந்த உடல்களுடன் உறவு கொள்பவர் என்றெல்லாம் ஏராளமான கதைகள் உண்டு. என்னெனவோ சொல்லி எம் வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறோம். ஆனால் ஏறத்தாழ எம் மிருகம் வெளிவருவதைத் தானே அது காட்டுகிறது?
மறப்பதை விடுத்து நாம் புழுங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். மதன் சொல்வது போலவே "வன்முறையாளனுக்கும் எமக்கும் ஓர் அங்குல இடைவெளிதான். 


தோல்வி அடைந்த ஹிட்லர் இறந்த பிறகும் தூற்றப் படுவது இருக்கட்டும். 2 அணுகுண்டுகளால் ஜப்பானியர்களை அழித்த அமெரிக்கா, விஎட்நாமியர்களை அழவைத்தவர்கள், விஷவாயுக் கசிவுக்குக் காரணமானவர்கள், இன்றும் முஸ்லிம்களைக் கொள்பவர்கள், இப்படி அடுக்கிக் கொண்டே போகக் கூடிய குற்றங்களை செய்தவர்கள் இந்தளவு வெறுக்கப் படுவதில்லையே? கீழ்த்தரமாக விமர்சிக்கப் படுவதில்லையே?


இன்னொரு சம்பவம்! தமிழ் என இணையத்தில் தேடும்போது விடுதலைப் புலிகள் பாலியல் குற்றவாளிகள் என ஒரு செய்தி. இடி அமீன் மனைவி இறந்த பின்பும் கொடூரமாக உடலை சிதைத்த கட்சிதான் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு சக மனிதனை கொன்ற பின்பும் அவனைக் சித்ரவதை செயத் துடிக்கிறோம். யாரும் தவறானவர்களாக இருக்கட்டுமே! ஆனால் ஒரு தனிமனிதனின் தன்மானத்தை எவ்வளவு சுரண்டுவது? 


மறுபுறம் சிங்களவர்களை, சிங்களக் காடையர்கள் என அடையாளப் படுத்தும் தமிழ்நாட்டு  மக்களும் உண்டு. அவர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரானவர்களா? அப்படியெனில் அவர்கள் எம் அனைவரையும் (தமிழர்களை) எதிரிகளாக அடையாளப் படுத்தினால் என்ன தவறு? இரு மொழி என பேசி நின்ற இடதுசாரித் தலைவர்கள் அவர்களயும் உண்டு. சம உரிமை , மனிதம் இதெல்லாம் தாண்டி நாம் விலகிப் போவதாக தென்படுகிறது. 

மனிதன் எவ்வளவு தூரம் வன்மம் படைத்வனாகிப் போகிறான் என்பதற்கு நான் கண்ட இரு சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டேன். தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுக. வலையில் என் கருத்துகளைச் சொல்ல உங்கள் மேலான கருத்துகளை மறக்காமல் விட்டுச் செல்லுங்கள்.
நன்றி..  
                   










   



2 comments:

  1. இணையத்தில் தமிழில் வளமான கருத்துகளைக் கூற புதிய வலைப் பதிவாக வரிக்குதிரை உருவாகி இருப்பதை வரவேற்கிறேன். என்னதான் இருந்தாலும் நம்மவர் மத்தியில் மனதில் பட்டதை சட்டென்று சொல்லும் தைரியம் பெரும்பாலும் இருப்பதில்லை. அந்த தைரியம் உள்ள வலைப் பதிவாக வரிக்குதிரை செயற்பட வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஆழ்ந்த பதிவு. இன்னும் தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete